“யாரும், யாரையும் நம்பி இல்லை” பட விழாவில் இயக்குனர் பா.ரஞ்சித் பேச்சு

யாரும், யாரையும் நம்பி இல்லை என்று ‘நறுவி’ பட விழாவில் இயக்குனர் பா.ரஞ்சித் பேசினார்.

Update: 2020-02-27 22:45 GMT
ஒன் டே புரொடக்சன்ஸ் தயாரித்துள்ள படம் ‘நறுவி’. இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் இயக்குனர்கள் பா.ரஞ்சித், அதியன் ஆதிரை, நடிகர் லிஜீஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டார்கள்.

விழாவில் இயக்குனர் பா.ரஞ்சித் பேசியதாவது:-

“பாசிச வெறிகொண்டு இந்தியாவில் சிறுபான்மையினரை கொடுமைப்படுத்தும் சூழ்நிலையில் இன்று நறுவி படத்தின் விழாவில் இருக்கிறோம். இந்த படத்தின் இயக்குனரை போலத்தான் நானும் அட்டக்கத்தி பட விழாவில் பதற்றமாக இருந்தேன். நறுவி படம் பெறும் வெற்றி மூலமாக இங்குள்ளவர்கள் வலுவான ஆட்களாக மாறுவார்கள் என்று நம்புகிறேன்.

படங்கள் தயாரிப்பதை விட அதை திரைக்கு கொண்டு வருவதுதான் மிகவும் கஷ்டமாக இருக்கிறது. படத்தை வெளியிடும்போது பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. அந்த தடைகளை எல்லாம் தாண்டி இந்த படம் வெற்றியடைய வேண்டும்.

இங்கு யாரும் யாரையும் நம்பி பிறக்கவில்லை. அவரவரின் தனித்தனி முயற்சி அவரவர்களுக்கான அடையாளத்தை தரும். இந்த படத்தில் உள்ள விஷுவல்ஸ் நன்றாக உள்ளது. தகுதியான படத்தை தமிழ் சினிமா ரசிகர்கள் கை விடுவதே இல்லை. ஊடகமும் நல்ல படத்தை கொண்டாடியே தீருவார்கள். இந்த படம் பெரிதாக வெற்றிபெற வாழ்த்துகிறேன்”

இவ்வாறு பா.ரஞ்சித் பேசினார்.

கதாநாயகன் செல்லா, இயக்குனர் ராஜா முரளிதரன், இசையமைப்பாளர் கிறிஸ்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்