கொரோனா அச்சுறுத்தலால் ஜேம்ஸ்பாண்ட் படம் ரிலீஸ் தள்ளிவைப்பு

ஜேம்ஸ்பாண்ட் படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இந்த படங்கள் வரிசையில் 25-வது படமாக நோ டைம் டூ டை தயாராகி உள்ளது.

Update: 2020-03-05 23:15 GMT
ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரத்தில் டேனியல் கிரெய்க் நடித்துள்ளார். முந்தைய கேசினோ ராயல், குவாண்டம் ஆப் சோலஸ், ஸ்கைபால், ஸ்பெக்டர் ஆகிய ஜேம்ஸ்பாண்ட் படங்களிலும் இவரே நடித்து இருந்தார்.

இந்த படத்தை கேரி ஜோஜி புகுனகா இயக்கி உள்ளார். இனிமேல் ஜேம்ஸ் பாண்ட் படங்களில் நடிக்க மாட்டேன் என்று டேனியல் கிரெய்க் அறிவித்து உள்ளார். இது அவரது கடைசி ஜேம்ஸ் பாண்ட் படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உள்ளது. கார் ரேசிங், அதிரடி சண்டை சாகசங் களுடன் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

இந்த படம் அடுத்த மாதம் (ஏப்ரல்) 8-ந்தேதி திரைக்கு வரும் என்று அறிவித்து இருந்தனர். இந்த நிலையில் கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதுவரை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். கொரோனா பாதிப்பு எதிரொலியாக நோ டைம் டூ டை ஜேம்ஸ்பாண்ட் படத்தின் ரிலீசை தள்ளி வைத்துள்ளனர். லண்டனில் நவம்பர் 12-ந்தேதியும் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளில் நவம்பர் 25-ந்தேதியும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்