ஓட்டல் தொழிலில் நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத்

நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத் சென்னை வேளச்சேரியில் ஓட்டல் திறந்துள்ளார்.

Update: 2020-03-11 22:45 GMT
செல்வ செழிப்போடு ஆடம்பரமாக வாழ்ந்த பழம்பெரும் நடிகை சாவித்திரி, தனது கடைசி காலத்தில் சொத்துகளை இழந்து கஷ்டப்பட்டு இறந்த சம்பவத்தை இப்போதைய நடிகைகள் பாடமாக எடுத்து சம்பாத்தியத்தை தொழில்களில் புத்திசாலித்தனமாக முதலீடு செய்து வருகிறார்கள்.

நயன்தாரா, திரிஷா, அனுஷ்கா, காஜல் அகர்வால் ஆகியோர் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்துள்ளனர். அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகளும் வாங்கி வாடகைக்கு விடுகிறார்கள். சமந்தா சென்னை, ஐதராபாத்தில் அடுக்கு மாடி குடியிருப்புகளில் வீடுகள் வாங்கி உள்ளார். தமன்னா நகை வியாபாரம் செய்கிறார்.

டாப்சி திருமணத்தை நடத்தி கொடுக்கும் தொழில் செய்கிறார். இவர்கள் வரிசையில் நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத்தும் தொழில் அதிபராக மாறி உள்ளார். இவர் தமிழில் கவுதம் கார்த்திக்கின் ‘இவன் தந்திரன்’ படத்தில் நடித்து பிரபலமானார்.

பின்னர் மாதவன், விஜய் சேதுபதியின் விக்ரம் வேதா, அஜித்குமாரின் நேர்கொண்ட பார்வை ஆகிய படங்களிலும் நடித்து இருக்கிறார்.

விஷாலுடன் சக்ரா படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். தற்போது ஸ்ரத்தா ஸ்ரீநாத் சென்னை வேளச்சேரியில் உள்ள மாலில் ஓட்டல் திறந்துள்ளார். இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ள அவர் “எனது ஓட்டல் சிறியதாக இருந்தாலும் கண்டிப்பாக நல்ல உணவு இங்கே கிடைக்கும்” என்று கூறியுள்ளார். அவருக்கு திரையுலகினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்