கொரோனாவால் தொழிலாளர்கள் பாதிப்பு: பணம் இருப்பவர்கள் உதவுங்கள் - நடிகை காஜல் அகர்வால்

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களுக்கு, பணம் இருப்பவர்கள் உதவுங்கள் என நடிகை காஜல் அகர்வால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2020-03-21 22:43 GMT

தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் காஜல் அகர்வால் கூறியதாவது:-

“நான் ஒரு வாடகை காரில் பயணித்தேன். காரின் டிரைவர் கடந்த 48 மணி நேரத்தில் எனது காரில் பயணம் செய்தது நீங்கள்தான் என்று கண்ணீர் மல்க கூறினார். எனது மனைவி தினமும் மளிகை சாமான்கள் வாங்கி வரும்படியும் கூறியும் என்னால் வாங்கி கொடுக்க முடியவில்லை. வீட்டில் எதுவும் இல்லை. குழந்தைகள் சாப்பிட உணவும் இல்லை என்றார்.

இன்று நீங்கள் தரும் பணத்தில் மனைவி கேட்ட மளிகை சாமான்களை வீட்டுக்கு வாங்கி செல்ல முடியும் என்று கூறினார். அவர் சொன்னதை கேட்டதும் மனதுக்கு கஷ்டமாக இருந்தது, கண்ணுக்கு தெரியாத கொரோனா வைரஸ் எல்லா துறைகளையும் தாக்கி இருக்கிறது. தொழிலாளர்கள் வாழ்க்கை மிகவும் பாதித்து இருக்கிறது.

வாடகை கார் டிரைவர் சொன்னதை கேட்டதுமே எனது கண் கலங்கியது. கொரோனா இவர்களை போன்றவர்களை கஷ்டப்படுத்திக் கொண்டு இருக்கிறது. என்னிடம் கஷ்டத்தை சொன்ன அந்த டிரைவருக்கு கூடுதலாக பணம் கொடுத்தேன். என்னை போன்றவர்களுக்கு ஐநூறு, ஆயிரம் ரூபாய் சிறிய விஷயம்தான். ஆனால் அவர்களுக்கு அது பெரிய உதவி. இது மாதிரி தொழில் செய்ய முடியாமல் இருக்கும் தொழிலாளர்களுக்கு பணம் இருப்பவர்கள் எல்லோரும் கொஞ்சம் அதிகமாக பணம் கொடுத்து இந்த கஷ்ட காலத்தில் அவர்களுக்கு உதவ வேண்டும்”.

இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.

மேலும் செய்திகள்