மன்னிப்பு கேட்ட துல்கர் சல்மான்

துல்கர் சல்மான், மலையாளத்தில் முன்னணி நடிகராக இருக்கிறார்.

Update: 2020-04-22 05:00 GMT
தமிழில், வாயை மூடி பேசவும், ஓ காதல் கண்மணி, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ஆகிய படங்களில் நடித்தவர் துல்கர் சல்மான், மலையாளத்தில் முன்னணி நடிகராக இருக்கிறார். இவர் பிரபல மலையாள நடிகர் மம்முட்டியின் மகன் ஆவார்.

அனுப் சத்யன் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்து தயாரித்துள்ள ‘வரனே அவஷ்யமுண்டு’ என்ற மலையாள படம் கடந்த பிப்ரவரி மாதம் திரைக்கு வந்து நல்ல வசூல் பார்த்தது. இதில் துல்கர் சல்மானுடன், ஷோபனா, சுரேஷ் கோபி, கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோரும் நடித்து இருந்தனர். இந்த படம் தற்போது இணையதளத்திலும் வந்துள்ளது.

இந்தநிலையில் படத்தை பார்த்த சேத்னா கபூர் என்பவர் தனது புகைப்படத்தை அனுமதி பெறாமல் ‘வரனே அவஷ்யமுண்டு’ படத்தில் உருவ கேலி செய்ய பயன்படுத்தி இருப்பதாகவும், இதற்கு மன்னிப்பு கேட்கவில்லை என்றால் வழக்கு தொடர்வேன் என்றும் டுவிட்டரில் பதிவிட்டார்.

இதையடுத்து அவருக்கு டுவிட்டரில் பதில் அளித்துள்ள துல்கர் சல்மான், “இந்த புகைப்படம் எப்படி பயன்படுத்தப்பட்டது என்பதை விசாரிக்கிறோம். புகைப்படத்தை உள்நோக்கத்தோடு பயன்படுத்தவில்லை. உங்களுக்கு ஏற்பட்டுள்ள சங்கடமான நிலைமைக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்