50 அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்க ரூ.50 லட்சம் நடிகர் லாரன்ஸ் வழங்கினார்

50 அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்க நடிகர் லாரன்ஸ் ரூ.50 லட்சம் வழங்கினார்.

Update: 2020-04-22 05:22 GMT
சென்னை,

கொரோனா ஊரடங்கால் வருமானம் இன்றி தவிக்கும் மக்களுக்கு உதவ நடிகர் ராகவா லாரன்ஸ் பெப்சி, நடிகர் சங்கம், நடன கலைஞர்கள் சங்கம், வினியோகஸ்தர்கள் சங்கம் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு பல கோடி நிவாரண உதவிகள் வழங்கினார்.

தமிழக அரசுக்கும் ரூ.50 லட்சம் வழங்குவதாக அறிவித்து இருந்தார். அந்த தொகையை அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்க சென்னை மாநகராட்சிக்கு தற்போது அளித்து இருக்கிறார். இதற்கான காசோலையை ராகவா லாரன்ஸ் சார்பில் வக்கீல் சி.ராஜசேகர், மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷிடம் நேரில் வழங்கினார். இதுகுறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் கூறும்போது, ‘கொரோனா ஊரடங்கில் தினமும் எனது அலுவலகம் முன்னால் ஏராளமானோர் உணவுக்காக திரண்டு நின்றதை பார்க்கும்போது வேதனையாக இருந்தது. வெளிமாநில தொழிலாளர்களும் உணவின்றி கஷ்டப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் உணவு சமைத்து பரிமாறுவது கஷ்டம். எனவேதான் அம்மா உணவகங்கள் மூலமாக அடுத்த மாதம் 3-ந்தேதி வரை அனைவருக்கும் இலவச உணவு வழங்குவதற்காக ரூ.50 லட்சத்தை வழங்கி இருக்கிறேன்.

கோடம்பாக்கம், வளசரவாக்கம் மண்டலங்களில் உள்ள சுமார் 50 அம்மா உணவகங்களிலும் 3-ந்தேதி வரை மக்களுக்கு இலவச உணவு வழங்கப்படும்’.

இவ்வாறு லாரன்ஸ் கூறினார்.

மேலும் செய்திகள்