தமிழ் திரையுலகில் எனது முதல் நண்பர் சிம்பு - விஷ்ணு விஷால்

தமிழ் திரையுலகில் தனது முதல் நண்பர் சிம்பு என விஷ்ணு விஷால் கூறியுள்ளார்.

Update: 2020-04-22 12:27 GMT
சென்னை,

தமிழில் வெண்ணிலா கபடி குழு, பலே பாண்டியா, குள்ள நரி கூட்டம், நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், ராட்சசன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் விஷ்ணு விஷால்.அவரது நடிப்பில் வெளியான ராட்சசன் படம் பெரிய வெற்றி பெற்றது. விருதுகளையும் குவித்தது.

2011-ல் தனது கல்லூரி தோழியை காதல் திருமணம் செய்து பின்னர் விவாகரத்து பெற்று பிரிந்தார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. நடிகர் விஷ்ணு விஷாலுக்கும் விளையாட்டு வீராங்கனை ஜுவாலா கட்டாவுக்கும் நெருக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் இதுவே விவாகரத்துக்கு காரணம் என்றும் கிசுகிசுக்கப்பட்டது. இருவரும் ஜோடியாக விருந்து நிகழ்ச்சிகளுக்கு செல்லும் புகைப்படங்களும் வெளியானது.

கடந்த சில மாதங்களுக்கு முன் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியானது. இதன் மூலம் தங்கள் காதலை அவர்கள் உறுதிப்படுத்தியதாக கூறப்படுகிறது.

ஜுவாலா கட்டாவை 2-வது திருமணம் செய்து கொள்ள விஷ்ணு விஷால் திட்டமிட்டு இருப்பதாகவும் இதுபற்றிய அறிவிப்பை விரைவில் வெளியிடுவார் என்றும் பேசப்படுகிறது.

இந்நிலையில்,  விஷ்ணு விஷால் தனது முதல் படத்திற்குப் பிறகு தமிழ் திரையுலகில் தனது முதல் நண்பர் சிம்பு என வெளிப்படுத்தி உள்ளார்.

நடிகர் சிம்பு, தொழில்துறையில் மிகவும் வெளிப்படையாக பேசக்கூடிய நபர் எனக் கூறும் விஷ்ணு விஷால், தாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் மிகுந்த மரியாதை பகிர்ந்து கொள்வதாக தெரிவித்துள்ளார்.  தான் ‘ராட்ச்சசன்' திரைப்படப் படப்பிடிப்பில் இருக்கும் போதே, சிம்பு சினிமா மற்றும் நடிப்பு குறித்த பெரும் அறிவைப் பெற்றார் எனக் கூறியுள்ளார். இதனை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்ட விஷ்ணு விஷால், இருவரும் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

தற்போது அவர் கைவசம் உள்ள ‘காடன்', ‘ஜகஜால கில்லாடி', ‘எஃப்.ஐ.ஆர்' மற்றும் ‘மோகன் தாஸ்' ஆகிய  படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் செய்திகள்