44 படங்களில் கதாநாயகனாக நடித்தவர் மீண்டும் டைரக்டர் ஆகிறார், ராமராஜன்!

44 படங்களில் கதாநாயகனாக நடித்த ராமராஜன் மீண்டும் டைரக்டர் ஆகிறார்.

Update: 2020-04-25 04:57 GMT
சென்னை,

ராமராஜன் மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்தவர். சினிமா ஆசையில் சென்னைக்கு வந்து டைரக்டர் ராமநாராயணனிடம் உதவி டைரக்டராக வேலை செய்தார். ‘மண்ணுக்கேத்த பொண்ணு’ படத்தின் மூலம் டைரக்டர் ஆனார். அந்த படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து, ‘மருதாணி,’ ‘மறக்கமாட்டேன்,’ ‘ஹலோ யார் பேசுறது’ உள்பட பல படங்களை டைரக்டு செய்தார்.

இவருக்கும், அப்போது முன்னணி கதாநாயகியாக இருந்த நளினிக்கும் இடையே காதல் மலர்ந்தது. இந்த காதலுக்கு நளினியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

இதற்கிடையில், ‘நம்ம ஊரு நல்ல ஊரு’ என்ற படத்தின் மூலம் ராமராஜன் கதாநாயகன் ஆனார். முதல் படமே 100 நாட்கள் ஓடி வெற்றி பெற்றதை தொடர்ந்து அவருடைய காதலும் வெற்றி பெற்றது. ராமராஜன்-நளினி இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டார்கள். அவர் நடித்த ‘கரகாட்டக்காரன்’ மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. திரையிட்ட தியேட்டர்களில் எல்லாம் வெற்றிகரமாக ஓடி, படம் வெள்ளி விழா கண்டது. ‘ஊரு விட்டு ஊரு வந்து,’ ‘மில் தொழிலாளி,’ ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’ உள்பட 44 படங்களில் கதாநாயகனாக நடித்தார். அவர் நடித்த படங்கள் அனைத்தும் பூஜை போட்ட அன்றே வியாபாரம் ஆனது.

இந்த நிலையில் ராமராஜனுக்கும், நளினிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இருவரும் விவாகரத்து செய்து கொண்டார்கள். இவர்களுக்கு அருண், அருணா என்ற (இரட்டையர்கள்) மகனும், மகளும் இருக்கிறார்கள். பல வருட இடைவெளிக்குப்பின், ராமராஜன் மீண்டும் டைரக்டு செய்ய இருக்கிறார். இதற்காக இன்றைய முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான விஜய்சேதுபதியிடம் ஒரு கதை சொல்லி இருக்கிறார். ராமராஜன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்க சம்மதித்து இருக்கிறார். இந்த படத்தில் ராமராஜன் நடிக்கவில்லை. டைரக்டு செய்வதோடு சரி. தொடர்ந்து அவர் இயக்குவதில் கவனம் செலுத்த முடிவு செய்து இருக்கிறார்.

மேலும் செய்திகள்