கொரோனா நிவாரணம் நடிகர்களிடம் உதவி கேட்கும் லாரன்ஸ்

கொரோனா நிவாரணத்திற்கு நடிகர்களிடம் லாரன்ஸ் உதவி கேட்டுள்ளார்.

Update: 2020-05-02 04:59 GMT
சென்னை,

நடிகர் ராகவா லாரன்ஸ் தனது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

“நான் கொரோனா நிவாரண நிதியாக ரூ.3 கோடி வழங்குவதாக அறிவித்த பிறகு பெரும்பாலான மக்களும், பிற சங்கங்களை சேர்ந்தவர்களும் உதவிக்காக என்னை அணுகினர். எனவே மேலும் வினியோகஸ்தர் சங்கத்துக்கு ரூ.15 லட்சமும், நடிகர் சங்கத்துக்கு ரூ.25 லட்சமும், துப்புரவு பணியாளர்களுக்கு ரூ.25 லட்சமும் வழங்கினேன். மக்கள் சேவையை எனது கடமையாக பார்க்கிறேன்.

உதவி கேட்டு நிறைய வீடியோக்கள், கடிதங்கள் வந்து கொண்டு இருக்கின்றன. அவர்கள் பணம் கேட்கவில்லை. சமைத்து சாப்பிட அத்தியாவசிய தேவையான அரிசி கேட்கிறார்கள். தனி மனிதனால் எல்லாவற்றையும் செய்ய முடியாது. எனவே அவர்களுக்கு உதவ ரஜினிகாந்திடம் அரிசி தரமுடியுமா? என்று கேட்டேன். அவர் உடனடியாக 100 அரிசி மூட்டைகளை அனுப்பினார். அவருக்கு நன்றி.

இதுபோல் கமல்ஹாசன், விஜய், அஜித்குமார் உள்ளிட்ட அனைத்து நடிகர்கள் மற்றும் அரசியல்வாதிகள் என்று உதவி செய்ய தயாராக இருக்கும் அனைவரிடமும் வேண்டுகோள் வைக்கிறேன். பணமாக கேட்கவில்லை. யாராவது உணவு பொருள்கள் தர விரும்பினால் நேரில் வந்து வாங்கி கொள்கிறோம். நான் தொடங்கிய தாய் அமைப்பு மூலம் இந்த உதவிகள் வழங்கப்படும்”.

இவ்வாறு லாரன்ஸ் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்