'காக்க காக்க' படத்தில் இருந்தே நான் அவரது ரசிகை - நடிகை அபர்ணா பாலமுரளி

'காக்க காக்க' படத்தில் இருந்தே நான் அவரது ரசிகை என சூரரைப் போற்று படத்தின் கதாநாயகி நடிகை அபர்ணா பாலமுரளி கூறியுள்ளார்.

Update: 2020-05-04 06:09 GMT
சென்னை,

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகிய படம் சூரரைப் போற்று. இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகிய இந்தப் படத்தில் அபர்ணா பாலமுரளி, தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்தப் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும், சிக்யா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளன. 

படத்தின் டீசர், பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. விமானம் தொடர்பான கதை என்பதால், விமானத்தில் சுமார் 15 நாள் ஷூட்டிங் நடந்துள்ளது. இதற்காக தனியார் விமானம் ஒன்றை வாடகைக்கு எடுத்து ஷூட்டிங்கை நடத்தியுள்ளனர்.

இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா, விமானத்தில் நடந்தது. அப்போது விமானத்தில் பயணம் செய்திராத ஏழை மாணவர்கள் விமானத்தில் அழைத்துச்செல்லப்பட்டனர். இந்த பட, ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது. 

இதற்கிடையே, பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட போது, சூரரைப்போற்று படத்தில் சூர்யா ஜோடியாக நடிக்கப் போகிறேன் என்பது முதலில் தெரியாது என்று நடிகை அபர்ணா பாலமுரளி  கூறியுள்ளார். மேலும் அவர் அவர் கூறும்போது, சுதா கொங்கரா இயக்கும் படம் என்பது மட்டும் தான் எனக்குத் தெரியும். பிறகு ஆடிஷனின் தேர்வாகி, சூர்யா நடிக்கும் படம் என்று தெரிந்ததும் நான் எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்தேன். ஏனென்றால் 'காக்க காக்க' படத்தில் இருந்தே நான் அவரது ரசிகை.  காக்கா காக்கா ’வெளியானபோது நான் பனிரெண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். நான் எப்போதும் அவருக்கு ஒரு பெரிய ரசிகையாகவே இருப்பேன். இப்போது அவருடன் பணியாற்றுவது உண்மையில் ஆச்சரியமாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். 

நடிகை அபர்ணா பாலமுரளி   8 தோட்டாக்கள், ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் ஹீரோவாக நடித்துள்ள சர்வம் தாள மயம் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

மேலும் செய்திகள்