லாக் டவுனில் பணமின்றி தவித்த விவசாயிக்கு உதவிய சசிகுமார்
லாக் டவுனில் பணமின்றி தவித்த விவசாயிக்கு நடிகர் சசிகுமார் உதவி உள்ளார்.
சென்னை,
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் மே 17-ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு தொழில்கள் முடங்கியுள்ளது. விவசாயப் பணிகள் நடைபெறலாம் என அரசு அறிவிக்கப்பட்டிருந்தாலும் பொருட்களை வாங்க ஆளில்லாததால் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
இந்தநிலையில், வெளிநாட்டு வேலை வேண்டாம் என உதறி தள்ளிவிட்டு மதுரைக்கு வந்து விவசாயம் பார்த்துக்கொண்டிருக்கும் கோபால கிருஷ்ணன் என்பவர் மீனாட்சிபுரத்தில், 3.5 ஏக்கரில் வாழைத்தோட்டம் போட்டுள்ளார். வாழைத்தார் வெட்டும் பருவம் வந்த போது, வெட்ட வழியின்றி தவித்து வருவதாக ‘கத்துக்குட்டி’ திரைப்படத்தின் இயக்குநர் சரணவன் தனது முகநூலில் பதிவிட்டிருந்தார். இதனை அறிந்த நடிகர் சசிக்குமார் அந்த விவசாயி கோபாலக்கிருஷ்ணனுக்கு ரூ.25000 பண உதவி செய்துள்ளார். பணத்தை கடனாக பெற்ற விவசாயி, அடுத்த அறுவடையில் பணத்தை திருப்பி கொடுத்து விடுவேன் என, உறுதி அளித்துள்ளார்.
நடிகர் சசிக்குமார் சமீபத்தில் போலீசாருடன் களத்தில் இறங்கி கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தியிருந்தார். இந்நிலையில் தற்போது அவர் செய்திருக்கும் இந்த உதவி மக்களால் பாராட்டப்பட்டு வருகிறது.
வாழை அறுவடைக்கு வழியின்றி சிரமப்பட்ட இந்த விவசாயிக்கு 25,000 பண உதவி செய்திருக்கிறார் நடிகர் சசிகுமார். “சசி சார் உதவியா கொடுத்தாலும் அதை கடனா நினைச்சு, அடுத்த சாகுபடியில் நிச்சயம் அவருக்குத் திருப்பிக் கொடுப்பேன்” என்கிறார் விவசாயி கோபாலகிருஷ்ணன். நல்ல மனம் வாழ்க @SasikumarDirhttps://t.co/EqaezfCfPg
— இரா.சரவணன் (@erasaravanan) May 8, 2020