காதலரை பிரிந்ததாக வதந்தி - பிரியா பவானி சங்கர்

காதலரை பிரிந்ததாக வெளியான தகவல் வதந்தி என்று பிரியா பவானி சங்கர் தெரிவித்துள்ளார்.

Update: 2020-05-20 01:03 GMT

மேயாத மான், கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் ஆகிய படங்களில் நடித்து பிரபலமான பிரியா பவானி சங்கர், 10 ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரியில் சேர்ந்து படித்த ராஜ் என்பவரை காதலிப்பதாக அறிவித்து, அவரது புகைப்படத்தையும் வெளியிட்டு இருந்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்ட பதிவின் மூலம் காதல் முறிந்து விட்டதாக தகவல் பரவியது. அந்த பதிவில் அவர் கூறியதாவது:-

கிரிவலம் போனால் வேண்டியதை கடவுள் கொடுப்பார் என்று நம்பி திருவண்ணாமலை போனேன். கடவுள் கேட்டதை கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை கிழித்து என் முகத்திலேயே எரிந்து கைதட்டி சிரித்தார். மனிதர்கள் குணங்களை நாம் பார்க்க மறுத்த கோணத்தை காலம் காட்டியது. வாழ்க்கை மாறிவிட்டது. கிடைத்த கைகளை பற்றிக்கொண்டு கிடைத்த தோளில் ஒட்டிக்கொண்டு அடுத்த வாழ்க்கைக்கு தயாராக இந்த தனிமை தூண்டவில்லை. கேட்டதை தராமல் நல்லதை தந்துள்ளார் கடவுள். மாற்றங்கள் தரும் வலிகள் பழகக்கூடும்.

இவ்வாறு அவர் பதிவிட்டு இருந்தார். இந்த பதிவை பார்த்து காதலரை பிரியா பவானி சங்கர் பிரிந்து விட்டதாக தகவல் பரவியது.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் போனில் இந்த செய்தியை பார்த்து பிரியா பவானி சங்கர் சிரிப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு, என்னை பற்றிய வதந்திகளை படிக்கும்போது இப்படித்தான் என்று பதிவிட்டு காதலரை பிரிந்ததாக வெளியான தகவல் வதந்தி என்று உறுதிப்படுத்தி உள்ளார்.

மேலும் செய்திகள்