ஊரடங்கினால் மன அழுத்தம்: டி.வி நடிகை தற்கொலை

ஊரடங்கினால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக, டி.வி நடிகையான பிரேக்‌ஷா மேத்தா தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2020-05-28 00:24 GMT

பிரபல இந்தி டி.வி. நடிகை பிரேக்‌ஷா மேத்தா. (வயது 25) மத்திய பிரதேசத்தை சேர்ந்த இவர் மும்பையில் தங்கி இருந்து தொடர்களில் நடித்து வந்தார். மேரி துர்கா, லால் இஷ்க் உள்பட பல இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து இருக்கிறார்.

ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்ற கிரைம் பேட்ரோல் தொடரிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றார். கொரோனா ஊரடங்கினால் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து தனது சொந்த ஊரான இந்தூருக்கு சென்று 2 மாதங்களாக அங்கு தங்கி இருந்தார். இந்த நிலையில் வீட்டில் வழக்கம்போல் இரவு தூங்கச்சென்ற அவர் மறுநாள் காலையில் நீண்டநேரமாகியும் படுக்கை அறையில் இருந்து வெளியே வரவில்லை. இதனால் குடும்பத்தினர் கதவை திறந்து பார்த்தனர்.

அப்போது மின் விசிறியில் தூக்கு போட்டு பிரேக்‌ஷா மேத்தா பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சியானார்கள். தற்கொலை செய்வதற்கு முன்பு கடைசியாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் கனவுகள் மரணிப்பது என்பது மிகவும் மோசமானது என்று பதிவிட்டு உள்ளார். ஊரடங்கினால் தொடர்களில் நடிக்க முடியாமல் மன அழுத்தத்தில் அவர் இருந்ததாக கூறப்படுகிறது. பிணத்தை போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்