சதி லீலாவதி, மகளிர் மட்டும் பட அனுபவங்கள் - கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசன் டோக்கியோ தமிழ் சங்கம் நடத்திய இணையதள கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்று சதி லீலாவதி, மகளிர் மட்டும் பட அனுபவங்களை பகிர்ந்தார். அவர் கூறியதாவது.

Update: 2020-06-15 01:28 GMT
“பாலுமகேந்திராவுக்கு சினிமாவை அணுஅணுவாக தெரியும். எனக்கு அவர் வாத்தியார். அவரிடம் என்ன கற்றுக்கொண்டீர்கள் என்று கேட்டால் பட்டியல் போட தெரியாது. காமெடியை அதிகமாக அவர் கத்திரிப்பார். சதி லீலாவதி படத்தில் கோவை வழக்கு மொழி இருந்ததால் நாயகியாக கோவை சரளாவை நானே முடிவு செய்தேன். அதில் பாலுமகேந்திராவுக்கு வருத்தம்.

கோவை சரளாவின் திறமை அப்போது பலருக்கு தெரியாது. எனக்கு தெரிந்தது. அவர் படத்துக்குள் வந்தது எனக்கு உத்வேகம் அளித்தது. சதிலீலாவதி படத்தில் எனக்கு ஏதாவது பெயர் வந்தால் அதில் 50 சதவீதம் கோவை சரளாவுக்கு கொடுக்கலாம். மகளிர் மட்டும் படத்தில் எனது பங்கு என்பது பணம் தயார் செய்து கொடுப்பது மட்டும்தான். முதல் நாள் படப்பிடிப்புக்கு சென்றபோது அதில் நானும் சிறிய வேடத்தில் நடிக்க வேண்டும் என்றனர்.

படத்தின் கதையை நான் சொன்ன பிறகு அனைத்து வேலைகளையும் இயக்குனர் சீங்கீதம் சீனிவாசராவ், கிரேசி மோகன், ஊர்வசி ஆகியோர் பார்த்துக் கொண்டனர். நாயகிகள் அனைவரையும் ஒருங்கிணைத்து கவனித்து கொண்டது ஊர்வசிதான். அந்த படம் முடிந்ததும் ஊர்வசிக்கு ராட்சசி என்ற பட்டம் கொடுத்தேன். படத்தில் வேறு கதாபாத்திரங்களுக்கு வெவ்வேறு ஆட்களை பரிசீலித்தோம். ஊர்வசி கதாபாத்திரத்துக்கு அவரை தவிர வேறு யாரையும் நினைக்கவில்லை.

மேலும் செய்திகள்