பிரபல பாடகியின் மகன் இளம் இசையமைப்பாளர் மரணம்

பிரபல பாடகியின் மகனான இளம் இசையமைப்பாளர் மரணம் அடைந்துள்ளார்.

Update: 2020-09-13 23:48 GMT
பிரபல சினிமா பின்னணி பாடகி அனுராதா பட்வல். இவர் தமிழில் அருண் விஜய்யின் பிரியம் படத்தில் தில் ரூபா தில் ரூபா, கனவே கலையாதே படத்தில் பூசு மஞ்சள் பூசு மஞ்சள் உள்பட பல பாடல்களை பாடி உள்ளார். கமல்ஹாசனின் ஏக்துஜே கேலியே படத்தில் இடம்பெற்ற மேரே ஜீவன் சாத்தி பாடலை எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துடன் இணைந்து பாடி உள்ளார். இந்தியில் அதிகமான பாடல்கள் பாடி முன்னணி பாடகியாக இருக்கிறார். கடந்த 2017-ல் பத்மஸ்ரீ விருது பெற்றார். இவரது கணவர் அருண்பட்வல். இவர்களுக்கு ஆதித்யா பட்வல் என்ற மகன். ஆதித்யா இந்தி பட உலகில் இளம் இசையமைப்பாளராக வளர்ந்து வந்தார். சில வருடங்களுக்கு முன்பு இந்தியில் நவாசுதீன் சித்திக் நடிப்பில் பால்தாக்கரே வாழ்க்கை கதையை மையமாக வைத்து வெளியான தாக்கரே படத்துக்கு இசையமைத்து இருந்தார்.

ஆதித்யா பட்வலுக்கு சமீபத்தில் உடல்நல குறைவு ஏற்பட்டது. சிறுநீரக பாதிப்பும் இருந்தது. இதற்காக மும்பையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஆதித்யா பட்வல் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 35. அவரது மறைவுக்கு பழம் பெரும் பாடகி லதா மங்கேஷ்கர், இசையமைப்பாளர் சங்கர் மகாதேவன் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்