வெள்ளத்தில் சிக்கிய கார்: மெட்ரோ ரெயிலில் பயணித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

மழைவெள்ளத்தில் கார் சிக்கியதால் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்து மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு சென்று இறங்கினார்.

Update: 2020-11-26 22:15 GMT
தமிழ் திரை உலகில் ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ளார். கனா படத்துக்கு பிறகு கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்கள் அமைகின்றன. தற்போது பூமிகா, திட்டம் இரண்டு, நவரசா, துருவ நட்சத்திரம், இது வேதாளம் சொல்லும் கதை உள்ளிட்ட படங்கள் கைவசம் உள்ளன. தெலுங்கிலும் நடிக்கிறார். தெலுங்கு படமொன்றில் நடிப்பதற்காக ஐஸ்வர்யா ராஜேஷ் ஐதராபாத் செல்ல சென்னை விமான நிலையத்துக்கு காரில் புறப்பட்டார். ஆனால் ரோடுகளில் புயல் மழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து ஸ்தம்பித்தது. அவரது காரும் வெள்ளத்தில் சிக்கியது. காரில் சென்றால் விமானத்தை பிடிக்க முடியாது என்று உணர்ந்து மெட்ரோ ரெயிலில் பயணம் செய்து மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு சென்று இறங்கினார். முக கவசம் அணிந்து இருந்ததால் சக பயணிகள் அவரை அடையாளம் காணவில்லை. மெட்ரோ ரெயிலில் பயணித்த புகைப்படத்தை தனது வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு மெட்ரோ ரெயில் பயணம்தான் சிறந்தது என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்