சூப்பர் ஸ்டாராக உயர்ந்த போதும் பழமையை மறக்காத நடிகர் ரஜினிகாந்த்!

ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா தனுஷ் தனது தந்தை முதலாவதாக வாங்கிய காருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

Update: 2020-12-13 17:49 GMT
சென்னை,

ரஜினிகாந்த் தன்னுடைய 70-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்று பலரும் எதிர்பார்த்து கூறி வந்த நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31-ந்தேதி ‘நான் அரசியலுக்கு வருவது உறுதி’ என்று அறிவித்தார்.

அரசியலுக்கு வருவது பற்றி கூறிய ரஜினிகாந்த், எப்போது அரசியல் கட்சியை அறிவிப்பார்? என்று அவருடைய ரசிகர்கள் ஏங்கி காத்து இருந்தனர். அவர்களுக்கு பதில் அளிக்கும் வகையில் சமீபத்தில் ‘ஜனவரியில் கட்சி தொடக்கம் என்றும், அதுகுறித்து டிசம்பர் 31-ந்தேதி அறிவிக்கப்படும்’ என்றும் தெரிவித்தார்.

ரஜினிகாந்தின் இந்த அறிவிப்பு ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது. அந்த மகிழ்ச்சி கடலில் மேலும் ஒரு ஆனந்தமாக அவருடைய பிறந்தநாளும் நேற்று வந்தது.

நடிகர் ரஜினிகாந்த் தனது 70-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலகினர், முக்கிய பிரமுகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். 

ரஜினிகாந்தின் 70-வது பிறந்தநாளையொட்டி சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவருடைய வீடு முன்பு ரசிகர்கள் குவிந்தனர். அப்போது கேக் வெட்டியும், இனிப்பு வழங்கியும் ரசிகர்கள் ரஜினிகாந்த் பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடினார்கள்.

இந்தநிலையில் "இப்ப இல்லன்னா எப்பவும் இல்ல" என எழுதப்பட்டிருந்த கேக்கை வெட்டி பிறந்த நாளை தனது பண்ணை வீட்டில் கொண்டாடினார். இது தொடர்பான புகைப்படத்தை அவரது இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் டுவிட்டரில் வெளியிட்டார்.

இந்நிலையில் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா தனுஷ் தனது தந்தை முதலாவதாக வாங்கிய காருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். தற்போது விலையுயர்ந்த காரை வைத்திருந்தாலும் அப்போது வைத்திருந்த TMU 5004 என்ற பதிவெண் கொண்ட அந்தக் காரை ரஜினி இன்று முதல் பராமரித்து வருவது இந்தப் புகைப்படத்தின் மூலம் தெரிய வருகிறது.

மேலும் செய்திகள்