ஹாலிவுட் இயக்குனர் மீது நடிகை பாலியல் புகார்

ஹாலிவுட் நடிகர்கள், இயக்குனர்கள் மீது நடிகைகள் ‘மீ டூ’-வில் தொடர்ந்து பாலியல் புகார் கூறி வருகிறார்கள்.

Update: 2021-01-27 00:05 GMT
ஹாலிவுட் நடிகர்கள், இயக்குனர்கள் மீது நடிகைகள் ‘மீ டூ’-வில் தொடர்ந்து பாலியல் புகார் கூறி வருகிறார்கள். ஏற்கனவே ஆஸ்கார் விருது பெற்ற ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் பட வாய்ப்பு கேட்கும் நடிகைகளை படுக்கைக்கு அழைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக ஏஞ்சலினா ஜொலி, ராஸ் மெக்கோவன், அன்னபெல்லா, ஜேன் டோ, தயாரிப்பு பெண் நிர்வாகி மிமி ஹலேய் உள்பட 70-க்கும் மேற்பட்ட பெண்கள் புகார் அளித்தனர். இது தொடர்பான வழக்கில் அவருக்கு தண்டனை வழங்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் உலகம் முழுவதும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற ‘பாஸ்ட் அண்ட் பியூரியஸ்’ மற்றும் ‘டிரிபிள் எக்ஸ்’ படங்களை இயக்கி பிரபலமான ராப் கோஹன் மீது நடிகை ஏசியா அர்ஜெண்டோ பாலியல் புகார் கூறியுள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், “ராப் கோஹன் இயக்கத்தில் வின் டீசலுடன் ‘டிரிபிள் எக்ஸ்' படத்தில் நடித்தேன். படப்பிடிப்பில் கோஹன் என்னை அதிகமாக மது குடிக்க வைத்து பாலியல் வன்கொடுமை செய்தார். இதனை எனது சுயசரிதையில் எழுதி இருக்கிறேன்'' என்றார். இது ஹாலிவுட் பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து சமூக வலைத்தளத்தில் பலரும் கோஹனை கடுமையாக விமர்சித்து உள்ளனர். ஆனால் கோஹன் இதனை மறுத்துள்ளார்.

மேலும் செய்திகள்