பிரபல டைரக்டர் ஜனநாதன் மரணம்

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரான எஸ்.பி.ஜனநாதனுக்கு இரு தினங்களுக்கு முன்பு உடல்நல குறைவு ஏற்பட்டு வீட்டில் மயங்கி விழுந்தார்.

Update: 2021-03-15 01:11 GMT
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரான எஸ்.பி.ஜனநாதனுக்கு இரு தினங்களுக்கு முன்பு உடல்நல குறைவு ஏற்பட்டு வீட்டில் மயங்கி விழுந்தார். அவரை சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஜனநாதனுக்கு மூளைச்சாவு ஏற்பட்டு உள்ளதாகவும், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலை சிகிச்சை பலன் இன்றி ஜனநாதன் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 61. ஷாம், அருண் விஜய், குட்டி ராதிகா நடித்த இயற்கை படம் மூலம் ஜனநாதன் இயக்குனராக அறிமுகமானார். இந்த படம் சிறந்த படத்துக்கான தேசிய விருதை பெற்றது. தொடர்ந்து ஜீவா, நயன்தாரா நடித்த ஈ, ஜெயம் ரவி நடித்த பேராண்மை, விஜய்சேதுபதி, ஆர்யா நடித்த புறம்போக்கு என்கிற பொதுவுடமை ஆகிய படங்களை இயக்கினார். தற்போது விஜய்சேதுபதி, சுருதிஹாசன் நடிக்கும் லாபம் படத்தை இயக்கி வந்தார். இதன் படப்பிடிப்பு முடிந்து தொழில்நுட்ப பணிகள் நடக்கின்றன. இயக்குனர் சங்கத்திலும் பொறுப்பு வகித்துள்ளார். ஜனநாதனுக்கு திருமணம் ஆகவில்லை. எஸ்.பி.ஜனநாதன் மறைவுக்கு நடிகர்கள் சத்யராஜ், விஜய்சேதுபதி, ஜெயம் ரவி, நடிகைகள் கவுதமி, சுருதிஹாசன், இயக்குனர்கள் தங்கர் பச்சான், பா.ரஞ்சித், வெங்கட்பிரபு, அறிவழகன் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஜனநாதன் உடல் சென்னை மயிலாப்பூர் கச்சேரி சாலையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள். இன்று (திங்கட்கிழமை) இறுதிச்சடங்கு நடக்கிறது.

மேலும் செய்திகள்