தமிழ் திரைப்பட நடிகர் தீப்பெட்டி கணேசன் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்

தமிழ் திரைப்பட நடிகர் தீப்பெட்டி கணேசன் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

Update: 2021-03-22 06:26 GMT
சென்னை,

ரேணிகுண்டா படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்து பிரபலமானவர் தீப்பெட்டி கணேசன். அதற்கு பிறகு அஜித்தின் பில்லா 2, விஜய் சேதுபதியின் தென்மேற்கு பருவக்காற்று உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். இதன்பின்னர், அடுத்தடுத்த பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால், பொருளாதாரத்தில் நலிவடைந்த தீப்பெட்டி கணேசன், பல்வேறு சிறு தொழில்களை செய்து வந்தார்.

கடந்தாண்டு, கொரோனா ஊரடங்கு காலத்தில், பால் வாங்கக் கூட காசு இல்லாமல் கஷ்டப்படுவதாக கூறி இவர் வெளியிட்ட வீடியோவைப் பார்த்து கவிஞர் சினேகன் இவருக்கு உதவிக்கரம் நீட்டினார்.

இந்நிலையில், உடல்நலக்குறைவால் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த அவர் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

தீப்பெட்டி கணேசன் மறைவுக்கு இயக்குனர் சீனு ராம சாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், 

"எனது படங்களில் நடித்து வந்த சிறந்த நடிகன் தம்பி கார்த்தி என்ற தீப்பெட்டி கணேசன் உடல்நலக்குறைவு காரணமாக மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனையில் காலமான செய்தி கேட்டு உள்ளம் கலங்கினேன். அன்புநிறை இதய அஞ்சலி கணேசா.." எனப் பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்