படப்பிடிப்பை நிறுத்த சொன்ன விஜய்

கொரோனா 2-வது அலையால் படக்குழுவினர் பாதுகாப்பை கருதி படப்பிடிப்பை தற்போது தொடங்க வேண்டாம் என்றும் விஜய் கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2021-05-11 23:55 GMT
விஜய் நடிக்கும் 65-வது படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்துள்ளது. இரண்டாவது கட்ட படப்பிடிப்பை சென்னை உள்ளிட்ட சில பகுதிகளில் நடத்த திட்டமிட்டனர்.

வணிக வளாகம் ஒன்றில் முக்கிய காட்சிகளை படமாக்கவும் முடிவு செய்தனர். ஆனால் கொரோனா 2-வது அலையால் அரசு ஏற்கனவே வணிக வளாகங்களை மூடி தற்போது முழு ஊரடங்கையும் அமல்படுத்தி உள்ளது.

வணிக வளாகங்கள் மூடப்பட்டதுமே ஸ்டுடியோவில் வணிக வளாக அரங்கு அமைத்து படப்பிடிப்பை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டனர். இதற்காக பிரமாண்டமான வணிக வளாக அரங்கு அமைக்கும் பணிகளை தொடங்கியதாகவும் அரங்கு அமைக்கும் பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்பட்டது.

ஆனால் கொரோனா 2-வது அலை தீவிரமாக பரவி நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் நோய் தொற்றில் சிக்கி வருகிறார்கள். இயக்குனர்கள் கே.வி.ஆனந்த், தாமிரா, நடிகர்கள் பாண்டு, ஜோக்கர் துளசி உள்ளிட்டோர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

இதனால் படக்குழுவினர் பாதுகாப்பை கருதி படப்பிடிப்பை தற்போது தொடங்க வேண்டாம் என்றும் தொழிலாளர்கள் அரங்கு அமைக்கும் பணியில் ஈடுபட வேண்டாம் என்றும் விஜய் கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்