கணவர் வற்புறுத்தினால் சினிமாவை விட்டுவிலகி விடுவேன் - நடிகை காஜல் அகர்வால்

கணவர் வற்புறுத்தினால் சினிமாவை விட்டுவிலகி விடுவேன் என நடிகை காஜல் அகர்வால் கூறியுள்ளார்.

Update: 2021-05-19 23:59 GMT
காஜல் அகர்வால் 2008-ல் தமிழில் பழனி படத்தில் அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். பொம்மலாட்டம், நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, ஆல் இன் ஆல் அழகுராஜா, ஜில்லா, மாரி, பாயும் புலி, விவேகம், மெர்சல், போன்றவை அவருக்கு முக்கிய படங்களாக அமைந்தன. கடந்த வருடம் தொழில் அதிபர் கவுதம் கிச்சலுவை திருமணம் செய்து கொண்டார். காஜல் அகர்வால் நடித்து கடைசியாக கோமாளி படம் 2019-ல் திரைக்கு வந்தது. அவரது பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிந்து திரைக்கு வராமல் முடங்கி உள்ளது.

ஹேய் சினாமிகா என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். கமல்ஹாசன் ஜோடியாக நடிக்கும் இந்தியன் 2 படம் பாதியில் நிற்கிறது. சிரஞ்சீவியின் ஆச்சார்யா படத்தில் நடித்து வருகிறார்.

காஜல் அகர்வால் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது சினிமாவை விட்டு விலகுவது குறித்த கேள்விக்கு பதில் அளித்து காஜல் அகர்வால் கூறும்போது, “நான் எவ்வளவு காலம் நடிப்பேன் என்று எனக்கு தெரியாது. எனது கணவர் சினிமாவில் இருந்து விலகும்படி கூறினால் நடிப்பதை விட்டு விடுவேன். தற்போது கணவரும் குடும்பத்தினரும் எனக்கு ஆதரவாக உள்ளனர். ஏற்கனவே ஒப்பந்தமான படங்களில் நடிக்க கவனம் செலுத்துகிறேன்'' என்றார்.

மேலும் செய்திகள்