கொரோனாவால் தடை பொன்னியின் செல்வன் படப்பிடிப்பை விரைவில் முடிப்போம் டைரக்டர் மணிரத்னம் பேட்டி

பொன்னியின் செல்வன் படப்பிடிப்பை விரைவில் முடிப்போம் டைரக்டர் மணிரத்னம் பேட்டி, இயக்குனர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் நாவலை படமாக்கி வருகிறார்.

Update: 2021-07-11 00:26 GMT
 தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் 2 பாகங்களாக தயாராகிறது. இதில் ஆதித்த கரிகாலனாக விக்ரம், வந்தியத்தேவனாக கார்த்தி, அருள்மொழிவர்மனாக ஜெயம்ரவி, பூங்குழலியாக ஐஸ்வர்யா ராய், குந்தவையாக திரிஷா நடிக்கின்றனர்.

சரத்குமார், ஜெயராம், ஐஸ்வர்ய லட்சுமி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். இதன் முதல் கட்ட படப்பிடிப்பை கொரோனா பரவலுக்கு முன்பே தாய்லாந்து காடுகளில் நடத்தி முடித்தனர்.

இரண்டாம் கட்ட படப்பிடிப்பை ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் திரைப்பட நகரில் அரண்மனை அரங்குகள் அமைத்து நடத்தினர். இதில் ஐஸ்வர்யாராயும் கலந்து கொண்டு நடித்தார். அதன்பிறகு கொரோனா 2-வது அலை தீவிரமானதால் படப்பிடிப்பை நிறுத்தினர். இந்த படத்தில் நடிக்கும் ஐஸ்வர்ய லட்சுமிக்கு கொரோனா தொற்றும் ஏற்பட்டது. மீண்டும் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்பு நிலவுகிறது.

இந்த நிலையில் மணிரத்னம் தற்போது அளித்துள்ள பேட்டியில், “பொன்னியின் செல்வன் படத்துக்கான இன்னும் ஒரு கட்ட படப்பிடிப்பு முடியவில்லை. தற்போதைய சூழ்நிலையில் படப்பிடிப்பை நடத்துவது கஷ்டம். அனைத்து முன்எச்சரிக்கை நடவடிக்கையும் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டி உள்ளது. விரைவில் படப்பிடிப்பை முடிப்போம் என்று நம்புகிறேன். எனது முந்தைய படங்களை விட பொன்னியின் செல்வன் பிரமாண்ட படமாக இருக்கும்’’ என்றார்.

மேலும் செய்திகள்