பூட்டிய கழிவறையில் மாட்டிக்கொண்ட நடிகை - கதவை உடைத்து மீட்டனர்

‘நான் கடவுள் இல்லை’ என்ற திரைப்படத்தின் அறிமுக விழாவில் கலந்து கொண்ட நடிகை சாக்‌ஷி அகர்வால் பூட்டிய கழிவறையில் மாட்டிக்கொண்டார்.

Update: 2021-09-21 12:41 GMT
‘ராஜா ராணி’ படத்தின் மூலம் தமிழில் துணை நடிகையாக அறிமுகமானவர், சாக்‌ஷி அகர்வால். ‘காலா’ படத்தில் ரஜினிகாந்தின் மருமகளாகவும், ‘விஸ்வாசம்’ படத்தில் நயன்தாரா தோழியாகவும் நடித்திருக்கிறார். தனியார் தொலைக்காட்சியில் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானார். தற்போது ‘அரண்மனை 3’, ‘சிண்ட்ரெல்லா’, ‘பகீரா’ உள்ளிட்ட படங்களில் அவர் நடித்துக்கொண்டிருக்கிறார்.

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் டைரக்‌ஷனில் ‘நான் கடவுள் இல்லை’ என்ற திரைப்படத்தில் முன்னணி வேடத்தில் சாக்‌ஷி நடிக்கிறார். இந்தப் படத்தின் அறிமுக விழா சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோ லேப்பில் நடந்தது. இதில் சமுத்திரகனி, சாக்‌ஷி அகர்வால், இனியா உள்ளிட்ட திரை பிரபலங்கள் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு சாக்‌ஷி அகர்வால், ஸ்டூடியோ வளாகத்தில் உள்ள பெண்கள் கழிவறைக்கு சென்றார். எதிர்பாராத விதமாக கழிவறையின் உள்பக்க தாழ்ப்பாள் ‘லாக்’ ஆகிவிட்டது. இதனால் உதவிகேட்டு சாக்‌ஷி அகர்வால் குரல் எழுப்பினார். ஆனால் அவரது குரல் யாருக்கும் கேட்கவில்லை. பூட்டிய கழிவறையில் மாட்டிக்கொண்டு அவர் தவித்தார்.

நேரம் செல்ல செல்ல பயம் காரணமாக அவர் கதவை ஓங்கி தட்டியபடி அபயக் குரல் எழுப்பத் தொடங்கினார். கதவை ஆக்ரோஷமாக தட்டுவது போன்ற சத்தத்தை கேட்ட பார்வையாளர்களும், படக்குழுவினரும் உடனடியாக கழிவறைக்கு சென்று பார்த்தனர். தாழ்ப்பாளை சரி செய்ய முடியாததால் கதவை உடைத்து, சாக்‌ஷி அகர்வாலை மீட்டனர். நீண்ட நேரம் கழித்து மீட்கப்பட்ட சாக்‌ஷி, சிறிது நேரம் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு, அதன் பின்னர் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

இந்த சம்பவம் ஸ்டூடியோ வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்