ஜோதிகா கணவனாக இருப்பது பெருமை நடிகர் சூர்யா நெகிழ்ச்சி

ஜோதிகா கணவனாக இருப்பது பெருமை நடிகர் சூர்யா நெகிழ்ச்சி.

Update: 2021-10-06 17:11 GMT
ஜோதிகா நடித்துள்ள 50-வது படம் உடன்பிறப்பே. சசிகுமார், சமுத்திரக்கனி, சூரி, கலையரசன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இரா.சரவணன் இயக்கி உள்ளார். இந்த படம் குறித்து இணைய தளத்தில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. இதில் படக்குழுவினர் பங்கேற்றனர். அப்போது ஜோதிகா பற்றி சூர்யா பெருமையாக பேசிய ஆடியோவை ஒலிபரப்பினர். அதில் சூர்யா பேசும்போது, ‘‘எனக்கு ஜோதிகாவை 1998-ம் ஆண்டின் கடைசியில் பிலிம்சிட்டியில் இயக்குனர் வசந்த் அறிமுகம் செய்து வைத்தார். ஒரு பாறைக்கு மத்தியில் இருவரும் பார்த்துக்கொள்வது மாதிரியும், பிறகு இருவரும் கையைப்பிடித்து நடந்து போவது மாதிரியும் படமாக்கினார்கள். அன்றில் இருந்து இப்போதுவரை ஜோதிகாவை ஆச்சரியமாகவே பார்த்துக்கொண்டு இருக்கிறேன். வேறு ஒரு ஊரில் இருந்து வந்த பெண் வேறு ஒரு மொழியை கற்றுக்கொண்டு அந்த ஊரையும், மக்களையும் தன்னுடையதாக ஆக்கிக்கொண்டு உள்ளார். 50 படங்கள் நடித்துள்ளார். அவர் எடுத்த முடிவுகள் எல்லாவற்றிலும் ஏன் எடுக்கிறோம். எதற்காக எடுக்கிறோம் என்பதில் தெளிவாக இருப்பார். ஏன் சில படங்கள் செய்தேன். ஏன் சில படங்கள் செய்யவில்லை என்பதிலும் தெளிவாக இருப்பார். எப்போதுமே எது சரியோ அந்த பக்கம் இருப்பார். அவருடைய படங்கள், உறவுகள், வாழ்க்கையில் எடுத்த முடிவுகள் என அனைத்தையும் ஆச்சரியமாக பார்த்துக்கொண்டு இருக்கிறேன். முதல் படத்தில் இருந்து இப்போதுவரை கைகோர்த்து நின்று கொண்டிருப்பதை சந்தோஷமாக பார்க்கிறேன். உன்னுடைய 50-வது படத்துக்கு வாழ்த்துகள் ஜோதிகா, உனக்கு நண்பனாக, கணவனாக இருப்பதற்கு இந்த உலகத்துக்கு நன்றி சொல்லிக்கொண்டிருக்கிறேன்‘‘ என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்