ஜோதிகா பகிர்ந்த சினிமா அனுபவங்கள்

நடிகை ஜோதிகா திருமணத்துக்கு பிறகு கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடித்து வருகிறார்.

Update: 2021-10-07 16:48 GMT
நடிகை ஜோதிகா திருமணத்துக்கு பிறகு கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடித்து வருகிறார். அவரது 50-வது படமாக உடன்பிறப்பே படம் தயாராகி உள்ளது. இணையதளத்தில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் சினிமா வாழ்க்கை அனுபவங்கள் குறித்து ஜோதிகா பேசும்போது, ‘‘எனது கணவர் சூர்யா இல்லையென்றால் நான் ஒன்றுமே இல்லை. அவருக்கு நன்றி. எனது சினிமா பயணம் எளிமையானது. பெரிய நடிகர்கள் படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது.

எனது திரைப்பயணத்தில் இரண்டாவது இன்னிங்ஸ் முக்கியமானது. இதில் நிறைய கற்றுக்கொண்டேன். கடந்த 8 வருடங்களாக அர்த்தம் உள்ள படங்களில் நடித்து இருக்கிறேன். பெண்களும், குடும்பத்தினரும் பெருமைப்படும்படியான படங்களில் நடிக்க விரும்புகிறேன். அதுமாதிரி படங்களைத்தான் ஒப்புக்கொள்கிறேன். கடந்த 8 வருடங்களில் இதைத்தான் கற்றுக்கொண்டேன்.

எனது 50-வது படமான உடன்பிறப்பே மிகவும் முக்கியமானது. இதுவரை நடித்த படங்களில் நிறைய பேசி இருக்கிறேன். ஆனால் பெண்களுடைய நிஜமான வலியை இந்த படத்தில்தான் பிரதிபலித்து இருக்கிறேன். அதுதான் அமைதி. 90 சதவீதம் பெண்கள் அதுமாதிரிதான் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அமைதியாகவும், வலிமையுடனும் இருக்கிறார்கள். இதுவரை நடித்த படங்களில் இது வலிமையான கதாபாத்திரம்” என்றார்.

மேலும் செய்திகள்