வில் ஸ்மித் செயலை ஆதரித்த குஷ்பு

வில் ஸ்மித் தனது மனைவிக்காக செய்த செயலுக்காக வருத்தம் தெரிவிக்க அவசியம் இல்லை என்று டுவிட்டர் பக்கத்தில் குஷ்பு கூறியுள்ளார்.

Update: 2022-03-31 09:15 GMT
ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் தனது மனைவியின் மொட்டை தலையை பார்த்து உருவ கேலி செய்த நடிகர் கிறிஸ் ராக்கை கன்னத்தில் அறைந்த சம்பவம் உலகம் முழுவதும் ஆஸ்கார் விருதை தாண்டிய பேசுபொருளாக மாறி இருக்கிறது. வில் ஸ்மித் செய்தது சரியா, தவறா என்று சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து விவாதங்கள் நடக்கின்றன. எனது மனைவி தொடர்பான மருத்துவ ரீதியிலான பிரச்சினை பற்றி கிறிஸ் ராக் பேசியதால் தாங்க முடியாமல் உணர்ச்சி வேகத்தில் அடித்து விட்டேன். பொது வெளியில் இப்படி வரம்பு மீறியதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று வில் ஸ்மித் வருத்தம் தெரிவித்து உள்ளார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று ஆஸ்கார் அமைப்பு அறிவித்து உள்ளது. இந்த நிலையில் வில் ஸ்மித்துக்கு ஆதரவாக நடிகை குஷ்பு கருத்து தெரிவித்து உள்ளார். 

இதுகுறித்து டுவிட்டர் பக்கத்தில் குஷ்பு வெளியிட்டுள்ள பதிவில், “வில் ஸ்மித் தனது மனைவிக்காக செய்த இந்த செயலுக்காக வருத்தம் தெரிவிக்க அவசியம் இல்லை. இதுபோன்ற உடல் கேலிகளை எதிர்கொள்ளும் ஒரு பெண் தனக்காக பேச முடியும். ஆனால் அவளுக்காக கணவர் அதை செய்தால் அந்த பெண் ஆசீர்வதிக்கப்பட்டவள். அவன் மீது அன்பும், மரியாதையும் அதிகமாகும். மன்னிப்பு கேட்டதால் வில் ஸ்மித் மதிப்பு இன்னும் உயர்ந்துள்ளது. ஆஸ்கார் அமைப்பின் ஒப்புதலின்படியே இது நடந்து இருந்தாலும், ஒருவரை உருவ கேலி செய்து பேசுவது ஏற்கத்தக்கது அல்ல’’ என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்