"ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்" - நடிகர் சூர்யா

சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்து நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Update: 2023-05-19 18:27 GMT

சென்னை,

ஜல்லிக்கட்டு போட்டிகளை அனுமதிக்கும் தமிழக அரசின் அவசர சட்டத்தை ரத்து செய்யக்கோரி பல்வேறு தரப்பில் இருந்து தொடுக்கப்பட்ட வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்றுவந்த நிலையில், நீதிபதிகள் தீர்ப்பை நேற்று அறிவித்தனர்.

அதில், "தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த தடை இல்லை. ஜல்லிகட்டு போட்டிகள் தொடர்பாக தமிழ்நாடு அரசு அளித்த ஆவணங்கள் எங்களுக்கு திருப்தி அளிக்கும் வகையில் உள்ளன. தமிழக அரசின் சட்டத்திருத்தம் அடிப்படை உரிமைகளை மீறவில்லை. சட்ட விதிகளுக்கு உட்பட்டே உருவாக்கப்பட்டுள்ளது. ஜல்லிகட்டை அனுமதிக்கும் தமிழ்நாட்டு அரசின் அவசர சட்டம் செல்லும்" என்று தீர்ப்பளித்துள்ளது.

இந்த தீர்ப்பை பலரும் வரவேற்று கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், இந்த தீர்ப்பு குறித்து நடிகர் சூர்யா பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "ஜல்லிக்கட்டு நம் கலாசாரத்துடன் ஒருங்கிணைந்தது என்பதை உணர்த்தும்படி, உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருப்பது மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது. ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்" என்று குறிப்பிட்டுள்ளார்.



Tags:    

மேலும் செய்திகள்