இவன் தந்திரன்

கதையின் கரு: கல்வி கட்டண கொள்ளையை எதிர்க்கும் இளைஞன். என்ஜினீயரிங் படிப்பை பாதியில் நிறுத்திய கவுதம் கார்த்திக்கும் ஆர்.ஜே.பாலாஜியும் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் விற்பனை செய்யும் கடை வைத்து வியாபாரம் செய்கின்றனர்.

Update: 2017-07-03 06:20 GMT
சுயமாக புதிய தொழில் நுட்பத்தில் மொபைல் போனை உருவாக்கி அதனை சந்தைக்கு கொண்டு வர பெரிய நிறுவனங்களை அணுகி வாய்ப்பும் தேடுகின்றனர். கவுதம் கார்த்திக் கடையில் லேப்டாப் வாங்கி அது பழுதாகி போன ஆத்திரத்தில் இருக்கும் என்ஜினீயரிங் மாணவி ஷிரத்தா யூடியூப்பில் கவுதம் கார்த்திக் விற்பனை செய்யும் பொருட்கள் தரமற்றவை என்று வீடியோ வெளியிட்டு அவரது முன்னேற்றத்துக்கு தடையாக இருக்கிறார். கல்வி மந்திரி சூப்பர் சுப்பராயன் வீட்டில் கேமரா பொருத்தி விட்டு அதற்கான சம்பளத்தை கேட்கும் கவுதம் கார்த்திக்கை மிரட்டி விரட்டுகின்றனர்.

பணத்தை வாங்காமல் விடமாட்டேன் என்று வைராக்கியமாக இருக்கிறார் கவுதம் கார்த்திக். அப்போது வசதிகள் செய்து கொடுக்காத என்ஜினீயரிங் கல்லூரிகளை மூடப்போவதாக எச்சரித்து கல்லூரி அதிபர்களிடம் இருந்து கோடி கோடியாய் பணம் பிடுங்குகிறார் மந்திரி சூப்பர் சுப்பராயன். இதற்காக கல்லூரி நிர்வாகம் மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலித்து கெடுபிடி செய்கிறது. பணம் கொடுக்க முடியாத ஏழை மாணவன் தற்கொலை செய்து கொள்ள, தனது என்ஜினீயரிங் மூளையை பயன்படுத்தி மந்திரியை பழிவாங்க முடிவு செய்கிறார் கவுதம் கார்த்திக்.

சூப்பர் சுப்பராயன் பதுக்கி வைத்த ஊழல் பணத்தை ரகசியமாக படம் பிடித்து இணையதளத்தில் பரப்புகிறார். இதனால் சூப்பர் சுப்பராயன் மந்திரி பதவி பறிபோகிறது. வீடியோவை வெளியிட்ட கவுதம் கார்த்திக்கை கண்டுபிடித்து தீர்த்து கட்ட மந்திரியும் அவரது ஆட்களும் தேடி அலைகிறார்கள். கவுதம் கார்த்திக் தப்பினாரா? என்பது கிளைமாக்ஸ்.
கவுதம் கார்த்திக் துறுதுறுவென கதாபாத்திரத்தோடு ஒன்ற வைத்து நட்சத்திர அந்தஸ்தை உயர்த்தி இருக்கிறார்.

ஷிரத்தாவுடன் மோதுவது ரசனை. மழை நேரத்தில் அவரிடம் தனது காதலை சொல்வது ஜீவன். சூப்பர் சுப்பராயன் ஊழலை அம்பலப்படுத்தும் தந்திரங்களும் அவரது அடியாட்களிடம் காதலியுடன் சிக்கி தப்பிக்க போராடும் காட்சிகளிலும் விறுவிறுக்க வைக்கிறார். அதிரடி சண்டை காட்சிகளில் வேகம். நகைச்சுவையும் வருகிறது.

ஷிரத்தா அழகிலும் கடுகடுப்பு முகபாவனையிலும் கவர்கிறார். அவரது தோற்றத்தில் ஏழை மாணவி என்பது நம்பும்படி இல்லை. பாலாஜி நகைச்சுவை ஏரியாவை கலகலப்பாக வைத்து இருக்கிறார். சூப்பர் சுப்பராயன், ஸ்டன்ட் சில்வா, பரத் ரெட்டி வில்லத்தனத்தில் மிரட்டுகின்றனர். மயில்சாமி, மதன்பாப், கயல்தேவராஜ் கதாபாத்திரங்களும் நேர்த்தி. என்ஜினீயரிங் படித்தவர்களின் அவலத்தையும் கல்வி வியாபாரத்தையும் அழுத்தமான திரைக்கதையில் காட்சிப்படுத்தி கவனம் ஈர்த்துள்ளார் இயக்குனர் கண்ணன். வசனங்கள் பலம். தமன் இசையும், பிரசன்னா குமார் ஒளிப்பதிவும் படத்தை தூக்கி நிறுத்துகின்றன.

மேலும் செய்திகள்