திருமணமான கதாநாயகன், அவர் நிறுவனத்தில் வேலை பார்க்கும் கதாநாயகியின் ஒரு தலை காதல் படம் கேப்மாரி-விமர்சனம்

எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் ஜெய், வைபவி சான்ட்லியா, அதுல்யா ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கேப்மாரி’ படத்தின் விமர்சனம்.

Update: 2020-01-10 12:14 GMT
ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஜெய், ரெயில் பயணத்தில் வைபவியை சந்திக்கிறார். இருவரும் மது அருந்தி உடலால் இணைந்து விடுகிறார்கள். பல மாதங்களுக்கு பிறகு சென்னையில் மீண்டும் சந்தித்து காதலாகி திருமணம் செய்து கொள்கின்றனர். ஜெய் மீது அவர் நிறுவனத்தில் வேலை பார்க்கும் அதுல்யாவுக்கு ஒரு தலை காதல்.

ஒரு நாள் அதுல்யாவின் ஸ்கூட்டர் டயர் பஞ்சராகி விட அவரை தனது வண்டியில் ஏற்றி வீட்டில் கொண்டு விடுகிறார் ஜெய். அங்கேயே இருவரும் பீர் குடித்து போதையாகிறார்கள். அதன்பிறகு என்ன நடந்தது என்று ஜெய்க்கு ஞாபகம் இல்லை. ஆனால் சில நாட்களுக்கு பிறகு அதுல்யா தன்னை ஜெய் கர்ப்பமாக்கி விட்டதாக அவரது வீட்டில் பெட்டி படுக்கையுடன் வந்து தங்குகிறார்.

அதிர்ச்சியாகும் வைபவி விவாகரத்து கேட்கிறார். இதனால் ஏற்படும் பிரச்சினைகளும் ஜெய் என்ன முடிவு எடுத்தார் என்பதும் மீதி கதை.

ஜெய்க்கு அப்பாவியான முகத்தை வைத்து காதல், குறும்புத்தனங்கள் செய்யும் கதாபாத்திரம். அதில் கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். ரெயில் பயணத்தில் வைபவியை குடிக்க வைத்து எல்லை மீறுவது, முதல் இரவு சில்மிஷங்களால் போலீசில் சிக்குவது கிளுகிளுப்பானவை. தனது வீட்டில் குடியேறிய அதுல்யாவையும் மனைவியையும் சமாளிக்க முடியாமல் தவிப்பது ரசனை. கிளைமாக்சில் படத்தின் தலைப்புக்கு நியாயம் செய்கிறார்.

வைபவி கவர்ச்சியான காதலி. கணவருடன் செல்பி எடுத்த அதுல்யாவை கண்காணிக்க அவர் அலுவலகத்திலேயே வேலைக்கு சேர்ந்து மிரட்டுவது. ஜெய்யை பங்குபோட வந்த அதுல்யாவால் கலங்குவது என்று அழுத்தமான நடிப்பையும் வெளிப்படுத்தி இருக்கிறார். அதுல்யாவுக்கும் முக்கிய கதாபாத்திரம். அதை சிறப்பாக செய்துள்ளார்.

அலுவலக மேலாளராக வரும் சத்யன், தேவதர்ஷினி சிரிக்க வைக்கின்றனர். இரட்டை அர்த்த வசனங்கள் நெளிய வைக்கின்றன. படுக்கை அறை நெருக்கங்களும் தாராளம். இளமைத்தனமான கதையை கலகலப்பாகவும் விறுவிறுப்பாகவும் நகர்த்தி உள்ளார் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன். சித்தார்த் விபின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். ஜீவனின் கேமராவில் இளமை துள்ளல்.

மேலும் செய்திகள்