தாதா வில்லனுக்காக, பெண்ணை கடத்திய நாயகன் - டகால்டி

சந்தானம், யோகிபாபு, ரித்திகா சென் நடிப்பில் விஜய் ஆனந்த் இயக்கத்தில் ‘டகால்டி’ படத்திற்கான விமர்சனம் பார்க்கலாம்.

Update: 2020-02-03 16:59 GMT
கதையின் கரு: கதை மும்பையில் தொடங்குகிறது. அங்குள்ள குட்டி குட்டி தாதாக்களே பயப்படும் பெரிய தாதா, தருண் அரோரா. இவர் கொடுக்கும் வேலைகளை செவ்வனே செய்து முடிக்க வேண்டியது குட்டி தாதாக்களின் கடமை. தருண் அரோராவுக்கு ஒரு விசித்திர பழக்கம். இவர் ஆசைப்படும் பெண்ணின் ஓவியத்தை இவரே வரைவார். அந்த பெண்ணை குட்டி தாதாக்கள் ஓடிப்போய் தூக்கி வந்துவிட வேண்டும். இப்படித்தான் திருச்செந்தூரை சேர்ந்த ஒரு பெண்ணை கடத்தி வரும் வேலையை குட்டி தாதா ராதாரவியிடம், பெரிய தாதா தருண் அரோரா ஒப்படைக்கிறார்.

ராதாரவியிடம் இருந்து அந்த வேலையை முடித்து தருவதாக சந்தானம் வாங்கிக் கொள்கிறார். தாதாவின் உத்தரவுப்படி, சந்தானம் திருச்செந்தூர் போகிறார். அந்த பெண்ணை பார்க்கிறார் அவர்தான் ரித்திகா சென். சினிமா டைரக்டராக வேண்டும் என்பது அவருடைய கனவு. அதை நிறைவேற்றி தருவதாக அவரிடம், சந்தானம் பொய்யான வாக்குறுதியை கொடுக்கிறார். அவரை நம்பி ரித்திகா சென் மும்பை போகிறார். அவரை தாதா தருண் அரோராவிடம் சந்தானம் ஒப்படைத்தாரா, இல்லையா? என்பது மீதி கதை.

சந்தானம் யோகி பாபுவை துணைக்கு சேர்த்துக்கொண்டு, படம் முழுக்க சிரிக்க வைக்கிறார். ‘பஞ்ச்’ வசனம் பேசுகிறார். ‘‘ஹீரோ மாதிரி என்னை பஞ்ச் டயலாக் பேச வைக்காதே’’ என்று தன்னைத்தானே கிண்டலடிக்கிறார். இவரும், சந்தானமும் சேர்ந்து வருகிற காட்சிகளில் எல்லாம் தியேட்டரில் ஆரவாரம். இருவருமே ‘வசன நகைச்சுவை’யில், தூள் கிளப்புகிறார்கள்.

ரித்திகா சென், அழகான நாயகிதான். நடிப்பும் கூடவே கை கொடுப்பதால், முன்னணி நாயகியாகி விடுவார். ராதாரவியின் நடிப்பைப் போலவே ‘மேக்கப்’பும் வித்தியாசமாக இருக்கிறது. சொகுசு வாழ்க்கை நடத்தும் பணக்கார தாதா தருண் அரோராவின் கதாபாத்திரத்தைப்போல், நடிப்பும் புதுசாக இருக்கிறது. சந்தானபாரதியும், ரேகாவும் ரித்திகா சென்னின் அப்பா–அம்மாவாக வருகிறார்கள்.

விஜயநாராயணன் இசையில், பாடல்கள் தேறவில்லை. பின்னணி இசையில், மசாலா படங்களுக்கே உரிய வாசிப்பு. தீபக்குமார் பாரதியின் ஒளிப்பதிவு, சண்டை காட்சிகளில் சாகசம் காட்டியிருக்கிறது. குறிப்பாக, அந்த ரெயில் சண்டை ரசிக்க வைக்கிறது.

பணத்துக்கு ஆசைப்பட்டு பெண் கடத்தலுக்கு சம்மதிக்கும் சந்தானம், இறுதி காட்சியில் திடீர் என்று மனம் மாறுவது, நம்பும்படி இல்லை. அதேபோல் கதாநாயகி ரித்திகா சென் காணாமல் போனபின், அவரை குடும்பத்தினர் தேடாதது ஏன்? இதுபோல் நிறைய கேள்விகள். இந்த குறைகளை மூடி மறைக்கிறது, விறுவிறுப்பாக கதை சொன்ன விதம். டைரக்டர் விஜய் ஆனந்த், ஜனரஞ்சக டைரக்டர்கள் வரிசையில் இடம் பெறுவார்.

மேலும் செய்திகள்