‘காலா’ படத்திற்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட கோரி கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு

கர்நாடகாவில் ‘காலா’ படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கர்நாடகா ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. #Kaala

Update: 2018-06-04 15:11 GMT


பெங்களூரு, 
 
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா’ படம் வருகிற 7–ந் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

 காவிரி பிரச்சினையில் தமிழ்நாட்டுக்கு ஆதரவாக ரஜினிகாந்த் குரல் கொடுத்ததால், அவருடைய படத்தை வெளியிட தடை விதிக்குமாறு கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்தின. இதையடுத்து கர்நாடக திரைப்பட வர்த்தகசபை அந்த படத்திற்கு தடை விதித்துள்ளது.

காலா படத்திற்கு ஆதரவாக நடிகர் பிரகாஷ்ராஜ் குரல் கொடுத்துள்ளார். ஆயினும் எக்காரணம் கொண்டும் ‘காலா’ படத்தை கர்நாடகத்தில் வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்று கன்னட அமைப்புகள் மிரட்டல் விடுத்துள்ளன. கர்நாடக முதல்–மந்திரி குமாரசாமியும் இந்த வி‌ஷயத்தில் கையை விரித்துவிட்டார். இந்த நிலையில் ‘காலா’ பட தயாரிப்பு நிறுவனம் ‘வொண்டர்பார்‘ கர்நாடக ஐகோர்ட்டில் மனுவை தாக்கல் செய்துள்ளது. 

அதில் ‘காலா’ படம் வருகிற 7–ந் தேதி கர்நாடகத்தில் வெளியாவதாகவும், அதற்கு இங்குள்ள சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் கூறி இருக்கின்றன. எனவே, காலா படத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்க மாநில அரசுக்கு உத்தரவிடுமாறு மனுவில் கோரப்பட்டுள்ளது. அந்த மனு நாளை விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்