கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார் நடிகர் அமிதாப் பச்சன்

கொரோனாவில் இருந்து குணமடைந்து நடிகர் அமிதாப் பச்சன் வீடு திரும்பியுள்ளார்.

Update: 2020-08-02 12:29 GMT
மும்பை, 

பிரபல பாலிவுட் நடிகர்களான அமிதாப் பச்சனுக்கு கடந்த 11 ஆம் தேதி கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து அவரது மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ஆகியோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.  இதையடுத்து, அவர்கள் மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்கள்.

இந்திய அளவில் பல்வேறு மொழி படங்களில் நடித்து அசத்திய அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அறிந்த பலரும், அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப பிரார்த்தனை செய்து வந்தனர்.

இந்த நிலையில் இன்று அமிதாப் பச்சன் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக அவரது மகன் அபிஷேக் பச்சன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அபிஷேக் பச்சன் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

எனது தந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப பிரார்த்தனை செய்த அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2 தினங்களுக்கு முன்னர் நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்