அரியலூரில் பெண்ணிடம் 10 பவுன் தங்கச்சங்கிலி பறிப்பு மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

அரியலூரில் பெண்ணிடம் 10 பவுன் தங்கச்சங்கிலி பறிப்பு மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

Update: 2016-12-31 22:22 GMT
தாமரைக்குளம்,

அரியலூரில் பெண்ணிடம் 10 பவுன் தங்கச்சங்கிலியை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

குழந்தைகளுடன்...

அரியலூர் கல்லங்குறிச்சி சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகம் அருகே வசித்து வருபவர் குழந்தைவேலு. இவர் தனது வீட்டின் முன்பகுதியில் ஓட்டுனர் பயிற்சி பள்ளி (டிரைவிங் ஸ்கூல்) வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி மணிமேகலை (வயது 27).

இந்த நிலையில் குழந்தைவேலு வேலை நிமித்தமாக கோவைக்கு சென்று விட்டார். நேற்று காலை மணிமேகலை வீட்டின் முன்பு குழந்தைகளுடன் அமர்ந்து இருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். அவர்களில் ஒருவர் மட்டும் மணிமேகலையிடம் சென்று வாகனம் ஓட்டுனர் பயிற்சி குறித்து விவரம் கேட்டுக் கொண்டிருந்தார்.

தங்கச்சங்கிலி பறிப்பு

அப்போது திடீரென அந்த நபர் மணிமேகலையின் கழுத்தை நெரித்து அவர் அணிந்திருந்த 10 பவுன் தங்கச்சங்கிலியை பறித்தார். உடனே மணிமேகலை திருடன்... திருடன்... என அலறினார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்து அந்த நபரை பிடிக்க முயன்றனர்.

ஆனால் அந்த நபர் மின்னல் வேகத்தில் ஓடி சென்று மோட்டார் சைக்கிளில் தயாராக நின்று கொண்டிருந்த தனது கூட்டாளியுடன் தப்பி சென்று விட்டார்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து கயர்லாபாத் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு வந்த போலீசார், மணிமேகலையிடம் விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, பெண்ணிடம் நகையை பறித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியினரிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்