ஆண்டிப்பட்டி அருகே அனுமதியில்லாமல் மணல் அள்ளும் அவலம் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை

ஆண்டிப்பட்டி அருகே அனுமதியில்லாமல் மணல் அள்ளுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மணல் திருட்டு தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி ஒன்றியம் பாலக்கோம்பை அருகே மேற்கு தொடர்ச்சிமலை, நரசிங்கப்பெருமாள் மலை அடிவாரப்பகுதிகள

Update: 2017-01-08 22:15 GMT

கண்டமனூர்,

ஆண்டிப்பட்டி அருகே அனுமதியில்லாமல் மணல் அள்ளுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மணல் திருட்டு

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி ஒன்றியம் பாலக்கோம்பை அருகே மேற்கு தொடர்ச்சிமலை, நரசிங்கப்பெருமாள் மலை அடிவாரப்பகுதிகள் உள்ளன. இந்த பகுதியில் இரவு நேரங்களில் பொக்லைன் எந்திரங்கள் மூலம் திருட்டுத்தனமாக மணல் அள்ளப்பட்டு வருகிறது. இதற்கு பாலக்கோம்பை, ராஜக்காள்பட்டி, தெப்பம்பட்டி, அழகாபுரி ஆகிய கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையொட்டி சில மர்ம நபர்கள் விவசாயிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் இந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் பீதியில் உள்ளனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

குழாய்கள் உடைப்பு

இந்த பகுதியில் மணல் அள்ளப்பட்டு வருவதால் பல்வேறு இடங்களில் பெரிய அளவில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் நிலத்தடி நீர்மட்டமும் வேகமாக குறைந்து வருகிறது. மேலும் இந்த பகுதியில் ஒரு சில விவசாயிகள் பண்ணைக்குட்டைகள், நீர்த்தேக்கங்கள் அமைத்து ஆழ்குழாய் கிணறு மூலம் நீரைப்பாய்ச்சி விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் இந்த குட்டைகளையும் மர்ம நபர்கள் சேதப்படுத்தி வருகிறார்கள்.

மேலும் விவசாயத்திற்கு பயன்படுத்தி வரும் குழாய்களையும் உடைத்து வருகிறார்கள். இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். எனவே மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து மணல் திருட்டை தடுக்க வேண்டும் என்றும், விவசாயிகளுக்கு போதிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்