பெரணமல்லூர் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து 2 விவசாயிகள் பலி ஒருவர் படுகாயம்

பெரணமல்லூர் அருகே ஒரே மோட்டார் சைக்கிளில் 3 பேர் சென்றபோது தவறி விழுந்ததில் 2 விவசாயிகள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

Update: 2017-02-06 22:45 GMT

சேத்துப்பட்டு,

இந்த விபத்து பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–

மோட்டார் சைக்கிளில் சென்றனர்

திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூரை அடுத்த ஆவணியாபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் முருகன் (வயது 42), லோகநாதன் (40), விவசாயிகள். அரி என்ற ஆனந்தன் (27), கூலித்தொழிலாளி.

இவர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் ஒரே மோட்டார் சைக்கிளில் செய்யாறில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு சென்றனர்.

பின்னர் அவர்கள் மீண்டும் ஆவணியாபுரம் கிராமத்திற்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். இரவு 9 மணியளவில் கடுகனூர் அருகே வந்தபோது திடீர் என்று மோட்டார்சைக்கிள் நிலைதடுமாறி ஓடியது.

2 விவசாயிகள் பலி

இதனால் மோட்டார்சைக்கிளில் இருந்து 3 பேரும் தவறி கீழே விழுந்து படுகாயமடைந்தனர். அவர்களில் முருகன், லோகநாதன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். படுகாயம் அடைந்த அரி என்ற ஆனந்தனை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் பெரணமல்லூர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் முரளி மற்றும் போலீசார் விரைந்து சென்று விபத்தில் பலியான இருவரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தில் இறந்த முருகனுக்கு சின்னக்குழந்தை என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். லோகநாதனுக்கு வேண்டா என்ற மனைவி, 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.

மேலும் செய்திகள்