நடைபாதை ஆக்கிரமிப்பு நிலத்தை அளந்தால் தற்கொலை செய்து கொள்வேன் என பெண் மிரட்டல் அதிகாரிகள் சமரசம்

தாரமங்கலம் அருகே உள்ள சிக்கம்பட்டியில் சிலோன் காலனி உள்ளது.

Update: 2017-02-06 23:00 GMT

தாரமங்கலம்,

தாரமங்கலம் அருகே உள்ள சிக்கம்பட்டியில் சிலோன் காலனி உள்ளது. இங்கு அரசு ஒதுக்கிய நிலத்தில் 60 குடும்பத்தினர் வீடு கட்டி வசித்து வருகின்றனர். நடைபாதைக்காக சின்னதம்பி என்பவரிடம் நிலம் வாங்கி இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். சின்னதம்பி இறந்து விட்டதால் அவருடைய மனைவி வேதா, மருமகள் அம்பிகா ஆகியோர் நடைபாதையை ஆக்கிரமிப்பு செய்து குடிசை போட்டுக்கொண்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சிலோன் காலனி மக்கள் பாதை ஆக்கிரமிப்பை மீட்டு தரக்கோரி தாசில்தாரிடம் கடந்த மாதம் மனு கொடுத்தனர். இந்தநிலையில் நேற்று ஓமலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திருமால் அழகு, தாசில்தார் ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர்கள் குமரன், ரஜினிகாந்த், வருவாய் ஆய்வாளர் லதாஞ்சலி மற்றும் வருவாய்த்துறையினர் நடைபாதையை அளக்க சென்றனர். இதற்கு வேதா எதிர்ப்பு தெரிவித்து உடலில் மண்எண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டல் விடுத்தார். இதையடுத்து அதிகாரிகள் அவரை சமரசம் செய்தனர். பின்னர் நிலத்தை அளந்து நடைபாதைக்கு இடம் ஒதுக்கினர். மேலும் குடிசையை 2 நாட்களில் அகற்றி கொள்வதாக வேதா உறுதி அளித்ததை அடுத்து அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

மேலும் செய்திகள்