நந்தம்பாக்கத்தில் நண்பரை அரிவாளால் வெட்டிய ரவுடி கைது

சென்னையை அடுத்த நந்தம்பாக்கம் நேதாஜி நகரை சேர்ந்தவர் நாகராஜ்(வயது 48). பிரபல ரவுடியான இவர் மீது அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

Update: 2017-02-06 22:30 GMT

ஆலந்தூர்,

கடந்த சில தினங்களுக்கு முன் நாகராஜ் தனது நண்பர் லோகநாதன் என்பவருடன் சேர்ந்து மது அருந்தினார். பின்பு மதுபோதையில் இருந்த நாகராஜ் சாலையில் சென்ற பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டார். இதைப்பார்த்த லோகநாதன், நாகராஜிடம் ஏன் தகராறு செய்கிறாய்? என தட்டிக்கேட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த நாகராஜ் தான் வைத்திருந்த அரிவாளால் லோகநாதனின் கை, கால்களில் வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த லோகநாதனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

நந்தம்பாக்கம் போலீசார் ரவுடி நாகராஜை கைது செய்தனர். மேலும், இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்