பவானிசாகர் வனப்பகுதியில் குடற்புழு நோய் தாக்கி யானை சாவு

பவானிசாகர் வனப்பகுதிக்கு உட்பட்ட கொத்தமங்கலம் வனப்பகுதியில் பவானிசாகர் வனச்சரகர் பெர்னார்ட் தலைமையில் வனத்துறையினர் நேற்று முன்தினம் ரோந்து சுற்றி வந்தனர்.

Update: 2017-02-07 22:06 GMT

பவானிசாகர்,

பவானிசாகர் வனப்பகுதிக்கு உட்பட்ட கொத்தமங்கலம் வனப்பகுதியில் பவானிசாகர் வனச்சரகர் பெர்னார்ட் தலைமையில் வனத்துறையினர் நேற்று முன்தினம் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது குண்டுக்கல் பள்ளம் என்ற பகுதியில் ஒரு பெண் யானை இறந்து கிடந்தது. இதைப்பார்த்த அவர்கள் இதுபற்றி மாவட்ட வன அதிகாரி (பொறுப்பு) பத்மாவுக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் அவர் கால்நடை டாக்டர் அசோகனுடன் சம்பவ இடத்துக்கு சென்றார். பின்னர் கால்நடை டாக்டர் இறந்து கிடந்த யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தார். அப்போது அவர், ‘இறந்த யானைக்கு ஒரு வயது இருக்கும். அந்த யானை குடற்புழு நோய் தாக்கி இறந்துள்ளது’ என்று கூறினார். பிரேத பரிசோதனைக்கு பிறகு யானையின் உடல், மற்ற விலங்குகளுக்கு உணவாக அங்கேயே போடப்பட்டது.

மேலும் செய்திகள்