பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநில கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.

Update: 2017-03-11 22:45 GMT
திருச்சி,

தமிழ்நாடு அரசுப்பணியாளர் சங்கம் மாநில மையம் சார்பில் ‘அரசு பணியாளர்களின் 8-வது ஊதிய மாற்றம்‘ என்ற தலைப்பில் மாநில கருத்தரங்கு திருச்சியில் ஒரு ஓட்டலில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பொதுச்செயலாளர் பொன்னிவளவன் தலைமை தாங்கினார்.

இதில் முன்னாள் மாநில தலைவர்கள் கங்காதரன், தமிழரசன், முன்னாள் மாநில செயற்குழு உறுப்பினர் சுந்தரபாண்டியன், தமிழக ஆசிரியர் கூட்டணி மாநில அமைப்பாளர் ராஜேஸ்வரன் மற்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன்ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

ஓய்வூதிய திட்டம்

கூட்டத்தில், குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் ரூ.18 ஆயிரம் இருக்கும் வகையில் ஊதியத்தை மாற்றி அமைத்திட குழுவுக்கு வேண்டுகோள் விடுப்பது, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து துறைகளிலும் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டன. முன்னதாக சாகுல்அமீது வரவேற்றார். முடிவில் மாநில பொருளாளர் கணேசன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்