போலியோ சொட்டு மருந்து முகாம் கலெக்டர் தொடங்கி வைத்தார்

அரியலூர் மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை கலெக்டர் சரவணவேல்ராஜ் தொடங்கி வைத்தார்.

Update: 2017-04-02 22:45 GMT
அரியலூர்,

அரியலூர் மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் நேற்று நடைபெற்றது. அரியலூரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் நடந்த முகாமில் மாவட்ட கலெக்டர் சரவணவேல்ராஜ் கலந்து கொண்டு, குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

அரியலூர் மாவட்டத்தில் இன்று (நேற்று) மற்றும் வருகிற 30-ந்தேதி ஆகிய 2 கட்டமாக 5 வயதிற்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெறுகிறது. இந்த முகாம் மூலம் பிறந்த குழந்தை முதல் 5 வயதிற்கு உட்பட்ட 70 ஆயிரத்து 527 குழந்தைகள் பயன்பெறுவர்.

2 ஆயிரத்து 88 பணியாளர்கள்

மாவட்டத்தில் 544 மையங்களில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. நடமாடும் குழு, பஸ்நிலையங்கள், ரெயில் நிலையங்கள் மற்றும் முக்கிய பொது இடங்களிலும் சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

பொது சுகாதாரத்துறை, அங்கன்வாடி பணியாளர்களுடன் பிற துறை பணியாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர், ரோட்டரி சங்கத்தினர் என மொத்தம் 2 ஆயிரத்து 88 பணியாளர்கள் போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இவ்வாறு கலெக்டர் சரவணவேல்ராஜ் கூறினார்.

அதிகாரிகள்

முகாமில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் சோமசுந்தரம், அரியலூர் நகராட்சி ஆணையர் வினோத், வட்டார மருத்துவ அலுவலர் மணிவண்ணன், வட்டாட்சியர் முத்துகிருஷ்ணன் மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்