முக்கிய மருத்துவமனைகளில் 400 வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர் டாக்டர்கள் தாக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை

டாக்டர்கள் தாக்கப்படுவதை தடுக்க முக்கிய மருத்துவமனைகளில் 400 வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

Update: 2017-04-02 22:57 GMT

மும்பை,

டாக்டர்கள் தாக்கப்படுவதை தடுக்க முக்கிய மருத்துவமனைகளில் 400 வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

முக்கிய மருத்துவமனைகள்

மராட்டியத்தில் நோயாளிகளின் உறவினர்களால் டாக்டர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இதற்கு எதிராக டாக்டர்கள் போராட்டங்கள் நடத்தி வந்தனர். தற்போது மும்பை, தானே உள்பட துலே மாவட்டத்திலும் நோயாளிகளின் உறவினர்களால் டாக்டர்கள் தாக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.

மும்பையில் சயான், கே.இ.எம், நாயர் போன்ற முக்கிய மருத்துவமனைகளுக்கு டாக்டர்களின் பாதுகாப்பு பணிக்காக 400 வீரர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை மராட்டிய மாநில பாதுகாப்பு குழுமம் செய்து வருகிறது.

2 பேருக்கு மட்டுமே அனுமதி

இது குறித்து சயான் மருத்துவமனை தலைமை மருத்துவர் சுலேமான் மெர்ச்சண்ட் கூறியதாவது:–

பணியில் இருக்கும் டாக்டர்களின் பாதுகாப்பிற்காக அவரச உதவிக்காக 3374 என்ற எண்ணை அறிமுகப்படுத்தி உள்ளோம். இந்த எண்ணை அழுத்தினால் கலவர தடுப்பு படை போலீசாருக்கு உடனடியாக தகவல் அனுப்பப்படும். பின்னர் அங்கிருந்து பாதுகாப்பு பணிக்காக வீரர்கள் விரைந்து வந்து நடவடிக்கையில் ஈடுபடுவார்கள். மேலும் மருத்துவமனைகளில் நோயாளிகளுடன் 2 பேர் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுவர்.

குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்காணிக்க அவசர வார்டு, அவசர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்