முந்திரி சாகுபடி செய்த விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும்

அரியலூர் மாவட்டத்தில் முந்திரி சாகுபடி செய்த விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Update: 2017-05-31 22:15 GMT
தாமரைக்குளம்,

அரியலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) தனசேகரன் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:-

செங்கமுத்து (அரியலூர் மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர்):-

அரியலூர் பஸ் நிலையத்தில் இருந்து சத்திரம் வரை சாலையோர இருபுறங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை விரிவு படுத்தி, பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரியலூர், செந்துறை உள்ளிட்ட பகுதிகளில் ஒருங் கிணைந்த வேளாண் விரிவாக்க மையம் அமைக்க வேண்டும். முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீடு அட்டையை உடனே வழங்க வேண்டும். வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்க வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்ட பணியாளர்களிடம், பான் அட்டை கட்டாயம் கொண்டு வரவேண்டும் என கூறும் வங்கிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டுறவு சங்க புதிய உறுப்பினர்களுக்கும் விவசாய கடன்களை வழங்க வேண்டும்.

தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும்

அம்பேத்கர் வழியன் (தமிழக அம்பேத்கர் விவசாய இயக்க மாநில தலைவர்):-

தமிழக அரசு மேட்டூர் அணையை தூர்வாருதல் போல, 60 ஆண்டுகளுக்கு மேலாக தூர்வாராமல், செடிகள் மண்டிக்கிடக்கும், புள்ளம்பாடி வாய்க்காலையும் தூர்வாரி கரையை அகலப்படுத்த வேண்டும். திருமானூர், திருமழபாடி, அழகியமணவாளன், ஏலாக்குறிச்சி, தூத்தூர், ஸ்ரீ புரந்தான் ஆகிய பகுதிகளில் கொள்ளிடத்தின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட நட வடிக்கை எடுக்க வேண்டும். திருமானூர் பகுதியில் தீயணைப்பு நிலையம் உடனே அமைக்க வேண்டும்.

மணி (தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க நிர்வாகி):-

கீழகாவட்டாங்குறிச்சி பெரிய ஏரியை தூர்வார வேண்டும். சுத்தமல்லி நீர்த் தேக்கத்தில் வண்டல் மண் எடுப்பதற்கு பணம் கேட்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நிவாரணம் வழங்க வேண்டும்

விசுவநாதன் (தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர்):-

மாட்டிறைச்சி தடை சட்டத்தை உடனே திரும்ப பெற வேண்டும். வண்டல் மண் எடுப்பதற்கு ஊர் மக்களிடையே எல்லை பிரச்சினை ஏற்படுவதால், கிராமங்கள் தோறும் சிறப்பு முகாம்கள் நடத்தி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அரியலூர் மாவட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள 30,480 எக்டேர் முந்திரி சாகுபடிகள் தண்ணீர் இல்லாமல் காய்ந்துள்ளதால், சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும். ஏரியை தூர்வாரு வதற்கு தன்னார்வலர் களுக்கு அனுமதி வழங்கி, அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் உறுதுணையாக இருக்க வேண்டும்.

விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் (பொறுப்பு) தனசேகரன் கூறினார்.

இதில் வேளாண் இணை இயக்குனர் சதானந்தம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகேஸ்வரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்