பிளஸ்-1 மாணவிக்கு நடைபெற இருந்த திருமணம் தடுத்து நிறுத்தம் சமூக நலத்துறை அதிகாரி நடவடிக்கை

காஞ்சீபுரம் அருகே பிளஸ்-1 மாணவிக்கு நடைபெற இருந்த திருமணத்தை சமூக நலத்துறை அதிகாரி சங்கீதா தடுத்து நிறுத்தினார்.

Update: 2017-06-11 23:15 GMT
தாம்பரம்,

காஞ்சீபுரம் ஏனாத்தூர் பகுதியை சேர்ந்த பிளஸ்-1 படிக்கும் 16 வயது மாணவிக் கும், வேலூர் டவுன் பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் (வயது 24) என்ற வாலிபருக்கும் திருமணம் செய்து வைக்க இருவீட்டு பெற்றோர்களும் முடிவு செய்தனர். இதற்காக திருமண பத்திரிகைகள் அடித்து இருவீட்டினரும் தங்கள் உறவினர்கள், நண்பர்களின் வீடுகளுக்கு வழங்கினர்.

இவர்களின் திருமணம், நேற்று காலை காஞ்சீபுரம் அருகே கீழம்பியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற இருந்தது. திருமணத்தில் மணமக்களின் உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர்.

திருமணம் தடுத்து நிறுத்தம்

இதற்கிடையில் பள்ளி மாணவிக்கு திருமணம் நடைபெற இருப்பதாக காஞ்சீபுரம் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி சங்கீதாவுக்கு ‘சைல்டு லைன்’ அமைப்பினர் தகவல் கொடுத்தனர். உடனடியாக அவர், பாலுசெட்டிச்சத்திரம் போலீசாருடன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மாணவிக்கு நடைபெற இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினார்.

பின்னர் இரு வீட்டு பெற்றோர்களையும் அழைத்து பேசினார். மாணவிக்கு தற்போது 16 வயதுதான் ஆகிறது. தற்போது அவளுக்கு திருமணம் செய்து வைக்க கூடாது. அது சட்டப்படி குற்றம். மாணவிக்கு 18 வயது பூர்த்தி ஆன பிறகுதான் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

உறவினர்கள் ஏமாற்றம்

சமூக நலத்துறை அதிகாரி சங்கீதா கூறியதை ஏற்றுக்கொண்ட மணமக்களின் பெற்றோர், மாணவிக்கு 18 வயது பூர்த்தி ஆகும் வரையில் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க மாட்டோம் என்றும், தொடர்ந்து மாணவியை பள்ளிக்கு படிக்க அனுப்பி வைப்பதாகவும் எழுத்து பூர்வமாக உறுதி அளித்தனர். இதனால் மாணவியை பெற்றோரிடமே ஒப்படைத்து விட்டு சங்கீதா திரும்பிச் சென்றார்.

பிளஸ்-1 மாணவிக்கு நடைபெற இருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டதால் திருமண விழாவில் கலந்து கொள்ள வந்த இருவீட்டு உறவினர்கள், நண்பர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்