சேலம் அருகே பெண் எரித்து கொலை? கணவரை கைது செய்யக்கோரி உறவினர்கள் முற்றுகை

சேலம் அருகே பெண் உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்டதாகவும், அவரது கணவரை கைது செய்யக் கோரியும் கலெக்டர் அலுவலகத்தை உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2017-06-12 23:30 GMT
சேலம்,

சேலம் மாவட்டம் வீராணம் அருகே சுக்கம்பட்டி பாலத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 33). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி தனலட்சுமி (28). இவர்களுக்கு அபினேஷ்வரன் (12), திருக்குமரன் (10) ஆகிய இரண்டு மகன்களும், 4 மாதத்தில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. வெங்கடேஷ் சரிவர வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அக்கம் பக்கத்தினர் அவர்களுடைய சண்டையை விலக்கி விட்டு, இருவரும் தகராறு செய்யாமல் ஒற்றுமையாக குடும்பத்தை நடத்துங்கள் என்று அறிவுரை கூறி வந்தனர்.

பிணமாக கிடந்தார்

இந்தநிலையில், நேற்று முன்தினம் கணவன், மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பிறகு சிறிது நேரத்தில் தனலட்சுமி உடல் முழுவதும் தீயில் எரிந்த நிலையில் வீட்டில் பிணமாக கிடந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் சின்னப்பநாயக்கன்பாளையம் பகுதியில் வசித்து வரும் அவருடைய தாய் சாந்திக்கு தகவல் தெரிவித்தனர்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சாந்தி மற்றும் அவரது உறவினர்கள் உடனடியாக பாலத்தூர் கிராமத்திற்கு சென்றனர். ஆனால் அங்கு வீட்டின் முன்பக்க கதவு உள்புறமாக தாழ்ப்பாள் போட்டு பூட்டப்பட்டிருந்தது. இது தொடர்பாக வீராணம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் விசாரணை

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பூட்டி கிடந்த வீட்டின் கதவை திறந்து தனலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வீட்டில் வெங்கடேஷ் இல்லை. அவர் மனைவி இறந்ததை அடுத்து அங்கிருந்து தப்பிஓடி இருப்பது தெரியவந்தது. இதனால் தனலட்சுமியின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், அவரது கணவர் வெங்கடேசை பிடித்து விசாரணை நடத்தினால் தான் முழு விவரம் தெரியவரும் என்றும் உறவினர்கள் போலீசில் புகார் தெரிவித்தனர். இதையடுத்து தலைமறைவாக இருந்த வெங்கடேசை பிடித்து வீராணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கலெக்டர் அலுவலகம் முற்றுகை

இந்தநிலையில், தனலட்சுமியின் தாய் சாந்தி மற்றும் 50-க்கும் மேற்பட்ட உறவினர்கள் நேற்று சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து முற்றுகையிட்டனர். அங்கிருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், தனலட்சுமியை உயிரோடு எரித்து கொலை செய்து விட்டார்கள் என்றும், எனவே, இது சம்பந்தமாக விசாரணை நடத்தி வெங்கடேசை கைது செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

இதுகுறித்து சாந்தி கூறுகையில், எனது மகள் தனலட்சுமியை அவரது கணவர் வெங்கடேஷ் அடித்து துன்புறுத்தி வந்தார். இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் மகளை வெங்கடேஷ் அடித்து அவர் மீது மண்எண்ணெய் ஊற்றி உயிரோடு எரித்து கொலை செய்துவிட்டு தப்பிஓடிவிட்டார். அவரை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

குடும்ப தகராறில் தனலட்சுமி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரை வெங்கடேஷ் உயிரோடு எரித்து கொலை செய்தாரா? என்பது குறித்து வீராணம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்