உறவினருடன் தகராறு: தட்டிக்கேட்ட வாலிபர் அடித்துக்கொலை 2 பேருக்கு வலைவீச்சு

உறவினருடன் தகராறு செய்ததை தட்டிக்கேட்ட வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். தலைமறைவான 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2017-06-12 22:37 GMT

வாலாஜாபாத்,

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள கருமாங்கழனி கிராமம் கக்கன் தெருவைச் சேர்ந்தவர் முனுசாமி. இவருடைய மகன் பிரசாத் (வயது 18). இவர், அங்குள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.

பிரசாத்தின் உறவினரான வெங்கடேசன் என்பவருடன் அதே கிராமத்தை சேர்ந்த நிவாஸ் (21) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய இருவரும் தகராறில் ஈடுபட்டனர். இதை அறிந்த பிரசாத், நேற்று தனது உறவினருக்கு ஆதரவாக நிவாஸ் உள்ளிட்ட 2 பேரையும் அழைத்து தட்டிக்கேட்டார்.

அடித்துக்கொலை

இதனால் அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த நிவாஸ் உள்பட 2 பேரும் சேர்ந்து பிரசாத்தை சரமாரியாக அடித்து உதைத்தனர்.

இதில் மயங்கி விழுந்த பிரசாத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், பிரசாத் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

போலீஸ் வலைவீச்சு

இதுபற்றி தகவல் அறிந்து வந்த ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார், கொலையான பிரசாத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவான நிவாஸ் மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய இருவரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்