கன்னியாகுமரி அருகே படகு என்ஜின் பழுதானதால் கடலில் தவித்த 4 மீனவர்கள்

கன்னியாகுமரி அருகே படகு என்ஜின் பழுதானதால் கடலில் தவித்த 4 மீனவர்களை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் மீட்டனர்.;

Update:2017-06-17 03:45 IST
கன்னியாகுமரி,

கன்னியாகுமரி அருகே கீழமணக்குடியை சேர்ந்தவர் தாசன் (வயது 45). இவருக்கு சொந்தமான படகில் இவரும், மகன் சகாய அந்தோணி மற்றும் தினேஷ், ஜான் கிறிஸ்டன் ஆகியோர் நேற்று அதிகாலை கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் 4 பேரும் கடலில் மீன் பிடித்து விட்டு நேற்று பகல் 11 மணிக்கு கரை திரும்பியிருக்க வேண்டும்.

ஆனால் அவர்கள் யாரும் கரைக்கு வரவில்லை. இதனால் மீனவர்களின் உறவினர்கள் கடற்கரையில் சோகத்துடன் காத்திருந்தனர்.

கடலில் தவிப்பு

இதற்கிடையே குமரி மாவட்ட கடலோர பாதுகாப்பு குழும சப்-இன்ஸ்பெக்டர் ஜேசுராஜ், ஏட்டுக்கள் ஆனந்த், அனில்குமார், சுப்பிரமணியன் ஆகியோர் கடலில் ரோந்து சென்றனர்.

அவர்கள் கரையில் இருந்து 3 கடல் மைல் தொலைவில் ரோந்து சுற்றி வந்த போது கடலில் தாசன் உள்பட 4 மீனவர்கள் படகில் இருந்தபடி பரிதவித்து கொண்டிருப்பதை கண்டனர். அவர்கள் சென்ற படகில் என்ஜின் திடீரென பழுதாகிவிட்டதால் கரைக்கு திரும்ப முடியாமல் கடலிலேயே தவித்து கொண்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து கடலோர பாதுகாப்பு குழும போலீசார் அவர்கள் 4 பேரையும் பத்திரமாக மீட்டு சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வந்து சேர்த்தனர்.

மேலும் செய்திகள்