பல்லாவரம் அருகே சிக்னல் கோளாறு: புறநகர் ரெயில் போக்குவரத்து 30 நிமிட நேரம் பாதிப்பு
சிக்னல் பிரச்சினையால் கடற்கரை, தாம்பரம், செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயில்கள் ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்டன.
தாம்பரம்,
பல்லாவரம் ரெயில் நிலையம் அருகே நேற்று மாலை, 6.30 மணிக்கு அங்குள்ள சிக்னலில் பழுது ஏற்பட்டது. அதனால் திரிசூலத்தில் இருந்து பல்லாவரம் நோக்கி சென்ற மின்சார ரெயில், பாதி வழியில் நின்றது. பயணிகள் ரெயிலில் இருந்து இறங்கி, பல்லாவரம் ரெயில் நிலையத்திற்கு நடந்து சென்றனர்.
சிக்னல் பிரச்சினையால் கடற்கரை, தாம்பரம், செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயில்கள் ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்டன. வார இறுதி நாள் என்பதால் வெளியூர் செல்வோர் அதிகமாக இருந்ததால் ரெயில்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது. தகவல் அறிந்து ரெயில்வே ஊழியர்கள் சிக்னல் பழுதான பகுதிக்கு சென்று, பழுதை சரி செய்ததை அடுத்து, மின்சார ரெயில்கள் மீண்டும் இயக்கப்பட்டன.
சிக்னல் கோளாறு காரணமாக 30 நிமிட நேரம் வரை மின்சார ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால், புறநகர் ரெயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. ரெயில்கள் இயக்கப்படாததால், தென் மாவட்டங்கள் உள்ளிட்ட வெளியூர்களுக்கு செல்லும் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.