குடிநீர் வழங்கக்கோரி ஆலத்தூர் ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் காலிக்குடங்களுடன் முற்றுகை

குடிநீர் வழங்கக்கோரி ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் காலிக்குடங்களுடன் முற்றுகையிட்டனர்.

Update: 2017-06-24 23:00 GMT
பாடாலூர்,

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா இரூர் ஊராட்சிக்கு உட்பட்டது பெருமாள்பாளையம் கிராமம். இங்கு சுமார் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்தில், குடிநீர் குழாய்களில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. மேலும், அந்த பகுதியில் உள்ள ஆழ்குழாய் கிணறும் பழுதாகி 10 நாட்களுக்கு மேலாகிவிட்டது. இதுகுறித்து ஊராட்சி அலுவலர்களிடம் பொதுமக்கள் முறையிட்டும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

முற்றுகை

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் நேற்று குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பின்னர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்த அலுவலர் களிடம் தங்கள் பகுதியில் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் இல்லாததால், ஊராட்சி செயலாளர் அசோக்ராஜ், பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையையடுத்து குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்