வாக்காளர் பட்டியலில் மாற்றுத்திறனாளி மாணவ- மாணவிகள் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம்

வாக்காளர் பட்டியலில் மாற்றுத்திறனாளி மாணவ- மாணவிகள் பெயர்களை சேர்ப்பதற்கான முகாமை கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் தொடங்கி வைத்தார்.

Update: 2017-07-13 22:45 GMT
நாகர்கோவில்,

மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்காகவும், அவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் நேற்று நாகர்கோவில் ஓரல் காது கேளாதோர் பள்ளியில் சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமை கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் தொடங்கி வைத்து கூறியதாவது:-

இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி 18 வயது முதல் 21 வயதுக்கு உட்பட்ட புதிய இளம் வாக்காளர்களின் வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்ப்பதற்கான சிறப்பு பணி கடந்த 1-ந் தேதி முதல் குமரி மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. இந்த சிறப்பு பணி வருகிற 31-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த சிறப்பு முகாமில், 18 வயது பூர்த்தியடைந்த மாற்றுத்திறன் கொண்ட 35 மாணவ, மாணவிகளிடமிருந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான விண்ணப்ப படிவங்கள் பெறப்பட்டுள்ளது.

மேலும் அவர்களுடைய உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரிடம் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிற தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவினை உறுதி செய்திட மாவட்ட நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் கூறினார்.

அதைத்தொடர்ந்து கலெக்டர், செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகள் கல்வி கற்பதை நேரடியாக சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அதிகாரி பிரம்மநாயகம், தேர்தல் தனி தாசில்தார் சுப்பிரமணியன், தேர்தல் துணை தாசில்தார் ரவிச்சந்திரன், ஓரல் செவித்திறன் குறையுடையோர் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் டோனி ஷெரின் ஆகியோர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்